மாணவனுடன் மாயமான ஆசிரியை கோதை... ஆந்திராவுக்கு தனிப்படை போலீஸார் விரைந்தனர்
நெல்லை: நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த மாணவனுடன், தலைமறைவான செங்கோட்டை ஆசிரியை கோதை தற்போது ஆந்திராவில் முகாமிட்டிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து போலீஸ் படை அங்கு விரைந்துள்ளது.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கருப்பன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்த சந்திரகுமார் மகன் சிவசுப்பிரமணியன். இவர் தென்காசி இலத்தூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மாதம் 31-ந்தேதி வீட்டை விட்டு சென்ற அவர் திடீர் என மாயமானார்.

இதுகுறித்து கடையநல்லூர் போலீசில் மாணவனின் தாய் மாரியம்மாள் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிவசுப்பிரமணியன் தான் படிக்கும் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்த செங்கோட்டை காலாங்கரையை சேர்ந்த கோதைலட்சுமியுடன் மாயமாகியிருப்பது தெரிய வந்தது.
மாணவன் மாயமானது குறித்து கடையநல்லூர் போலீசாரும், ஆசிரியை மாயமானது குறித்து செங்கோட்டை போலீசாரும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர். விசாரணையில் மாணவன்-ஆசிரியை இடையே காதல் மலர்ந்து இருவரும் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது. கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி 2 பேரையும் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இருவரும் புதுவையில் வீடு பிடித்து குடித்தனம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் புதுவைக்கு விரைந்தனர். இதையறிந்த இருவரும் வீட்டை காலி செய்து விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அதன்பிறகு அவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் பற்றி இதுவரை எந்தவித துப்பும் கிடைக்காததால் அவர்களை பிடிப்பதில் போலீசார் திணறி வருகின்றனர். மாயமான இருவரும் உறவினர்கள், நண்பர்கள் யாருடனாவது தொடர்பு கொள்கிறார்களா? என்று போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் இருவரும் ஆந்திராவுக்கு தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக தனி்ப்படை போலீசார் விசாரணை நடத்தி 2 பேரையும் தேடும் பணியில் ஆந்திரா விரைகின்றனர்.












Click it and Unblock the Notifications