போலீஸ் பக்ரூதினின் செல்போனை வைத்து கூட்டாளிகளைத் தேடும் சென்னை போலீஸ்
இந்து முன்னணி செயலாளர் வெள்ளையப்பன், பா.ஜ.க. மாநில செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்ட இந்து இயக்க தலைவர்கள் கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த அல் உம்மா தீவிரவாதி போலீஸ் பக்ருதீன். கடந்த வாரம் சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் நாசவேலையில் ஈடுபடுவதற்கு சதி திட்டத்தில் ஈடுபட்டபோது இவர் போலீசில் பிடிபட்டார்.
பக்ருதீன் கொடுத்த தகவலின் பேரில், ஆந்திர மாநிலம், புத்தூரில் பதுங்கி இருந்த பிலால் மாலிக் நீண்ட நேர துப்பாக்கி சண்டைக்கு பிறகு உயிருடன் பிடிபட்டார். மற்றொரு தீவிரவாதியான பன்னா இஸ்மாயில் குண்டு காயத்துடன் பிடிபட்டார்.
தொடர்ந்து போலீஸ் பக்ருதீனுடம் போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்களை வாக்குமூலமாக பக்ருதின் அளித்துள்ளான். அதில் தமிழகத்தில் பா.ஜ.க., இந்து இயக்க தலைவர்களை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம் தீட்டி அதனை செயல்படுத்தி வந்ததாக தெரிய வந்துள்ளது.
மேலும், பக்ரூதீன் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, ‘எங்களது திட்டத்தின்படி சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ், வேலூரில் வெள்ளையப்பன், மதுரையில் பால்காரர் சுரேஷ் 6 பேரை தீர்த்துக் கட்டியுள்ளோம். எங்களது பட்டியலில் இந்து முன்னணி மாநில தலைவர் ராமகோபாலன் மற்றும் சென்னையில் பிரபலமான பிரமுகர் ஒருவரும் இடம் பெற்றிருந்தனர். இது தவிர திருப்பூர் மற்றும் ஈரோட்டை சேர்ந்த இந்து இயக்க தலைவர்கள் இருவரை கொலை செய்வதற்கும் திட்டமிட்டிருந்தோம்.
எங்களுடைய மதத்துக்கு எதிராக செயல்படுவர்கள் தான் எங்களின் இலக்கு. குடும்பம் மற்றும் உறவுகளை விட மதம்தான் எங்களுக்கு முக்கியம். இந்த கோட்பாட்டின் படியே 3 பேரும் செயல்பட்டு வந்தோம். நாங்கள் வைத்த குறிக்கு 6 பேர் பலியாகி விட்ட நிலையில், 4 பேர் உயிர் தப்பி விட்டனர்' எனத் பக்ருதீன் தெரிவித்திருந்தான்.
பக்ருதீனின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் பல தீவிரவாதிகள் அவனது தொடர்பில் இருந்ததும், அவர்கள் பல நாச வேலைகள் செய்யத் திட்டமிருந்ததும் அம்பலமாகியுள்ளது. எனவே, பக்ருதீனிடமிருந்து கைப்பற்றப் பட்ட அவனது செல்போனிலிருந்து அவனது கூட்டாளிகள் பற்றிய விசாரணையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.
இதனிடையே, தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், கட்சியின் தேசிய செயலாளர் இல.கணேசன் ஆகியோருக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்களும், நிர்வாகிகள் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன், மோகன் ராஜூலு உள்ளிட்டவர்களுக்கு துப்பாக்கி இல்லாத காவலர்களும் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், சென்னையில் உள்ள பா.ஜ.க அலுவலகத்துக்கும் பாதுகாப்பு பலப்படுத்த காவல்துறை முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.