ரஜினியுடன் தலைவர்கள், நடிகர்கள் சந்திப்பு தொடங்கியது... பெரும் பரபரப்பில் தமிழக அரசியல் களம்!
சென்னை: அரசியல் தலைவராக அவதாரம் எடுக்கப் போகும் ரஜினியைச் சந்தித்துப் பேசவும், ஆலோசனை கூறவும் தமிழக அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் ரஜினியைச் சந்திக்க ஆரம்பித்துள்ளனர்.
இன்று மட்டும் தமிழருவி மணியன், நடிகர் ஆனந்த ராஜ் ஆகிய இருவரும் ரஜினி வீட்டுக்கு வந்து பார்த்து பேசிவிட்டுச் சென்றனர்.

தமிழருவி மணியன் முந்தைய பாராளுமன்றத் தேர்தலில் பாஜக + முக்கிய திராவிட கட்சிகளை ஒருங்கிணைக்க பெரும் முயற்சி மேற்கொண்டவர்.
ரஜினியின் அரசியலில் இனி தமிழருவி மணியனுக்கு முக்கிய இடமிருக்கும் எனத் தெரிகிறது.
ஆனந்த ராஜ்
நடிகர் ஆனந்த ராஜ் புதுச்சேரிக்காரர். அதிமுக சார்பில் புதுவையில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். ஆனாலும் ஜெயலலிதாவின் அபிமானம் பெற்றவராகவும், முக்கிய பேச்சாளராகவும் இருந்தவர், ஜெ மறைவுக்குப் பிறகு அதிமுகவிலிருந்து ஒதுங்கியே உள்ளார். இப்போது அரசியலுக்கு வரும் ரஜினியுடன் கரம் கோர்க்க ஆர்வம் காட்டி வருகிறார்.

சந்திப்பு முடிந்து வெளியில் வந்தவரிடம் பேசியபோது, "அண்ணன் ரஜினிக்கு என் மீது எப்போதும் தனி அன்பு உண்டு. அந்த அன்பின் அடிப்படையில் சந்திக்க வந்தேன்," என்று கூறிவிட்டுக் கிளம்பினார்.
தமாகா யுவராஜ்
இன்று ரஜினியைச் சந்தித்த இன்னொரு அரசியல் பிரமுகர் யுவராஜ். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணித் தலைவரான யுவராஜ் ரஜினியைச் சந்தித்தது இன்னும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கட்சித் தலைவர் ஜிகே வாசனின் அனுமதியுடனே அவர் ரஜினியைச் சந்தித்துள்ளார்.

மேலும் தலைவர்கள்...
ரஜினிகாந்த் இன்று புதிய படப்பிடிப்புக்காக மும்பை கிளம்புகிறார். மூன்று வாரப் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பும் அவரை மேலும் சில முக்கிய தலைவர்கள் சந்திக்க நேரம் கேட்டுள்ளனர்.
ரஜினியின் இந்த அடுத்தடுத்த மூவ்கள், தமிழக அரசியல் களத்தை பரபரப்படைய வைத்துள்ளன. இப்போது களத்தில் உள்ள பெரும்பாலான கட்சித் தலைவர்கள் பெரும் பீதியில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications