வார தொடக்கத்தில் வாக்குப்பதிவு.. தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீதம் குறைய வாய்ப்பு?
சென்னை: விடுமுறை நாட்களை தொடர்ந்து தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால வாக்கு பதிவு சதவீதம் குறையும் வாய்ப்பிருப்பதாக பேச்சு எழுந்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு, ஒரே கட்டமாக, மே 16ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம், திங்கள்கிழமையாகும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்துமே தேர்தல் நாளான திங்கள்கிழமையை, சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவித்துள்ளன.
இதில் ஒரு சிக்கல் உள்ளது. முந்தைய நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகியவை ஏற்கனவே விடுமுறை தினங்கள், வீக் என்ட்.
3 நாட்கள் லீவு
எனவே, வெள்ளிக்கிழமை மாலை அலுவலகம் முடிந்ததும், கோடை சுற்றுலாவுக்காக குடும்பத்தோடு பலரும் கிளம்பினால், நான்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையை அனுபவித்துவிட்டு, செவ்வாய்க்கிழமை காலை அலுவலகம் திரும்பினால் போதும் என்று நினைக்க வாய்ப்புள்ளது.
லீவுன்னா ஜாலிதான்
விடுமுறை தினத்தில் வாக்குப்பதிவை வைத்தால், வாக்களிக்க யாரும் வருவதில்லை என்பதை கண்கூடாக பல தேர்தல்களில் தேர்தல் ஆணையம் பார்த்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற பெங்களூர் மாநகராட்சி தேர்தலின்போது கூட, நகர மக்களில் பெரும்பாலானோர், தியேட்டர், மால்களுக்கு செல்ல அன்றைய நாளை பயன்படுத்தினரே தவிர வாக்குப்பதிவு செய்ய செல்லவில்லை. எனவே வாக்குப்பதிவு குறைந்து காணப்பட்டது.
3 நாட்கள்
இந்த நிலையில், 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும் வகையில் ஒரு நாளை தேர்தல் ஆணையம் தேர்ந்தெடுத்திருப்பது வாக்கு பதிவை குறைத்துவிடும் என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது. தேர்தல் ஆணையம் கவனிக்காமல் இவ்வாறு தேதியை தேர்ந்தெடுத்துவிட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பாசிட்டிவா பாருங்க
இதுதொடர்பாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியது: தேர்தல் தேதியை நெகட்டிவாக பார்க்காமல் பாசிட்டிவாகாவும் பார்க்கலாம். தொடர்ச்சியான இந்த விடுமுறை நாட்களைப் பயன்படுத்தி வெளியூரில் இருப்பவர்கள், சொந்த ஊருக்குப் போய் வாக்களிக்க ஒரு வாய்ப்பு அமைந்து இருப்பதாக நாம் கருத முடியும்.
விழிப்புணர்வு உள்ளது
ஒருவேளை வீக் என்ட்டில் சுற்றுலா செல்வோர் கூட திங்கள்கிழமை வீடு திரும்பி வாக்குப்பதிவு கடமையை நிறைவேற்றலாமே. மக்கள், தங்கள் வாக்குகளைப் பதிவுசெய்வதில் மக்கள் மிகவும் உறுதியாகவே இருக்கிறார்கள். வாக்குரிமை குறித்தும், வாக்களிப்பின் அவசியம் குறித்தும் இந்த முறை மிகப் பெரிய பிரசாரத்தை மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்கள் ஒத்துழைப்புடன் செய்து முடித்துள்ளோம்.
வாரீர், வாரீர், வாக்களிக்க வாரீர்
தேர்தலுக்காகவே மே 16 அன்று அரசு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. எனவே, அன்றைய தினம் யாரும் வாக்குச் செலுத்தாமல் இருந்துவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்போது, பல்வேறு விஷயங்களையும் கருத்தில் கொண்டுதான் செயல்பட்டு இருக்கும். விடுமுறை தினத்தையும் ஆணையம் கருத்தில் கொண்டிருக்கும். இவ்வாறு லக்கானி கூறினார்.