பொள்ளாச்சி: போலீஸ் ஸ்டேஷனில் நகை திருடிய போலீஸ்காரர் கைது
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே போலீஸ் ஸ்டேசனில் நகை திருடிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டேசனில் இருந்த சிசிடிவி கேமரா நகை திருடிய போலீசை காட்டிக்கொடுத்தது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன் (31). இவர் கடந்த சில வருடங்களாக கோவை ஆயுத படை பிரிவில் போலீசாக பணியாற்றி வந்தார்.
கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பொள்ளாச்சி சரகத்துக்கு உட்பட்ட கோமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் 2ம் நிலை போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். நாள் தோறும் இரவு பணியில் இருப்பார்.
கடந்த 27ம் தேதி இரவு பணியில் இருந்த போது, திருட்டு வழக்கில் பறிமுதல் செய்து வைத்திருந்த மூன்றரை பவுன் நகையை திருடி உள்ளார். 28ம் தேதி காலை பணிக்கு வந்த எஸ்ஐ பிரபாகரன், திருட்டு நகையை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்காக பீரோவை திறந்து பார்த்தார். அதிலிருந்த நகைகளைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் விசாரித்தார். அவர்கள் தாங்கள் எடுக்கவில்லை என கூறினர்.
பாண்டியனிடம் கேட்ட போது, அவரும் தான் எடுக்கவில்லை என கூறினார். சந்தேகம் அடைந்த எஸ்ஐ பிரபாகரன், இன்ஸ்பெக்டர் ரவியிடம் கூறினார். இதற்கிடையில் ஸ்டேஷனில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை இன்ஸ்பெக்டர் ரவி சோதனை செய்தார். அப்போது அதில் பாண்டியன் நகை திருடியது பதிவாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் ரவி நடத்திய விசாரணையில் நகை திருடியதை பாண்டியன் ஒப்புக் கொண்டார். இதைத் தொடர்ந்து அவரை கைது செய்து அவரிடம் இருந்த முன்றரை பவுன் நகையை பறிமுதல் செய்தார். அவர் மீது திருட்டு வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.