வெளியேறினா உங்களுக்குத்தான் நஷ்டம்.. கூட்டணிக் கட்சிகளுக்கு பொன். ராதாகிருஷ்ணன்!
நெல்லை: கூட்டணி கட்சிகள் விலகினால் பாஜகவுக்கு பாதிப்பு இல்லை என நெல்லையில் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நெல்லையில் பொன் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது, "பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜ அரசின் செயல்பாடுகளினால் நாட்டில் தொழில் வளம் முன்னேற்றம் அடைந்துள்ளது.
உலக அளவில் இந்தியாவுக்கு மரியாதை உயர்ந்துள்ளது. பாஜ அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. வீட்டுக்கு ஒரு வங்கி கணக்கு திட்டம் அனைவராலும் வரவேற்கப்பட்டுள்ளது.

அகில இந்திய தலைவர் அமித்ஷா வேண்டுகோளின் படி தமிழகத்தில் 60 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் தீவிர உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதிய பஸ் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டம் துவங்கி வைக்கப்பட்டது.
கன்னியாகுமரி முதல் குளச்சல் வரை துறைமுகம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான ஆரம்பக்ட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் தென் மாவட்டங்களில் பெரிய வளர்ச்சி ஏற்படும். இந்தியாவின் ஓட்டு மொத்த வளர்ச்சிக்கு இந்த துறைமுகம் வளம் சேர்க்கும். பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் கருத்துகள் சொல்ல உரிமை உண்டு.
அதே நேரம் விமர்சனம் செய்யும் போது வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும். பாஜக கூட்டணியில் இருந்து விலகும் கட்சிகள் இழப்பை சந்திக்கும். இதனால் பாஜக கட்சிக்கு இந்த விதத்திலும் பாதிப்பு இல்லை" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications