போராட்டம் நடத்தும் மீனவ மக்களை சந்திக்காதது ஏன்? ... பொன்னார் புதுவிளக்கம்
ஓகி புயலில் காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணி கோரி போராட்டம் நடத்தும் மீனவர்களை சந்திக்காததற்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் புது விளக்கத்தை கூறியுள்ளார்.
நாகர்கோவில் : ஓகி புயலில் காணாமல் போன மீனவர்களை மீட்கக் கோரி நடத்தும் போராட்டம் அரசியல் நோக்கத்தோடு நடத்தப்படுவதால் அவர்களை சந்திக்க இயலவில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதுகுறித்து நாகர்கோவிலில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறுகையில், புயலில் சிக்கி கடலில் மிதக்கும் மீனவர்களின் சடலங்களை மீட்க கடற்படை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் குமரி மாவட்டத்தில் தனி குழுக்கள் அமைக்கப்பட்டு வீடுகள், மரங்கள் உள்ளிட்ட சேதமடைந்த விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும்.இனி வருங்காலத்தில் மீனவர்கள் மற்றவர்களோடு தொடர்பில் இருக்க கூடிய வகையில் தொடர்பு கருவிகள் கொடுப்பதற்கு , மாநில அரசாங்கம் பரிந்துரை செய்யும் பட்சத்தில் மத்திய அரசு இது குறித்து முடிவு செய்யும்.
விவசாயத்தை பொருத்தவரையில் சேதமடைந்த வாழை, ரப்பர் உள்ளிட்ட மரங்களுக்கு சிறப்பான இழப்பீடு கொடுப்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். மண்பாண்ட தொழிலாளர்களின் பாதிப்புகளை அதிகாரிகள் கணக்கிட்டு இழப்பீடு வழங்கிட வேண்டும்.
கடற்படை, கப்பல் படையை பற்றி தவறான பிரசாரம் பரப்பப்பட்டு வருகிறது. அவர்களின் கடுமையான முயற்சியின் காரணமாக 700 மீனவர்கள் இதுவரையிலும் மீட்கப்பட்டுள்ளனர். கடலில் தத்தளிக்கும் மீனவர்கள் மீட்டுள்ளது பாராட்டத்தக்க விஷயம். எஞ்சிய மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மீனவர்களை தேடும் பணியில் 27 கப்பல்கள் ஈடுபடுத்தபட்டுள்ளன. அரசியல் நோக்கத்தோடு போராட்டம் நடத்தப்படுவதால் மீனவ மக்களை சந்திக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கேரளா அரசை போல உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு தொகை 20 லட்சமாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்றார் அவர்.