பொங்கலை வைத்து "விளம்பர வெள்ளை" அடிக்கும் நிறுவனங்கள். "கலர்புல்" வசூலில் சேனல்கள்!
பண்டிகை என்றாலே உற்சாகம்தான்... அதுவும் பொங்கல் பண்டிகை தமிழர் திருநாள்... சாதி, மதம் பார்க்காமல் அனைவரும் கொண்டாடும் பண்டிகை. இந்த பண்டிகைக்காக எந்த மாதிரியான விளம்பரங்கள் டிவி சேனல்களில் வெளியாகும் என்றால் இன்றைக்கு எதுவும் இல்லை என்றே கூறவேண்டும்.
தீபாவளிக்கு புத்தாடைகள் எடுக்க வாங்க என்று தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் பிரபல நட்சத்திரங்கள் கூவி கூவி அழைப்பார்கள்.
பொங்கல் பண்டிகைக்கு என்ன மாதிரியான விளம்பரங்கள் வரிசைகட்டும் என்று இன்றைக்கு சொல்ல முடியவில்லை. காரணம் அந்த அளவிற்கு பொங்கல் பண்டிகை விளம்பரங்களில் வறட்சிதான் நிலவுகிறது என்றே கூறவேண்டும்.
கிராமப்புறங்களில் பொங்கலுக்கு வீடுகளை சுத்தம் செய்து வெள்ளையடிப்பார்கள். இப்போது வர்ணங்கள்தான் வீடுகளை அலங்கரிக்கின்றன. பெயிண்டுகள், டிஸ்டெம்பர்கள் என வசதிக்கு தக்கவாறு வர்ணங்களை பூசுகின்றனர். இதற்காகவே தொலைக்காட்சிகளில் பொங்கலுக்கு முன்பாக பெயிண்ட் விளம்பரங்கள் வரிசைகட்டும். ஆனால் இப்போது எல்லாம் வழக்கமான விளம்பரங்கள்தான் வருகிறதே தவிர குட்டி குட்டி கவிதை போல பொங்கல் பண்டிகையை விளம்பரத்தில் யாரும் சொல்ல முன்வரவில்லை. வாணி ராணி ராதிகாதான் பெயிண்ட் விளம்பரத்தில் வந்து வர்ணமாலை பற்றி பேசுகிறார்.
தொலைக்காட்சிகளில் வர்ணமாலை
மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவதில் முக்கியமாக திகழ்கிற தொலைகாட்சி தொடர்களின் பங்குகளை கருத்தில் கொண்டு, புதுமையான முறையில் "வர்ணமாலை"என்னும் வர்ண சேர்க்கை வழிகாட்டி மூலம், டிராக்டர் எமல்ஷனின் பல ரகங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்ட ஏசியன் பெயிண்ட்ஸ் களமிறங்கியது
டிவி சீரியலும் வர்ணங்களும்
வாணிராணி,வம்சம் மற்றும் தென்றல் ஆகிய சீரியல்களுடன் இணைந்து புதுவிதமாய் மக்களை சந்திக்க திட்டமிட்டது ஏசியன் பெயிண்ட்ஸ்.
இத்தொடர்களில் இடம்பெறும் வரவேற்பறை, சமையலறை, படுக்கை அறை போன்ற இடங்களில் எல்லாம் இவர்களின் வண்ணக் கலவையை பயன்படுத்தயிருக்கிறார்கள் அவற்றை ஒரு புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறார்கள்.
ராதிகா சீரியல்
வாணி ராணி, வம்சம் சீரியல்களை பார்க்கும் இல்லத்தரசிகளுக்கு ஒவ்வொரு அறையில் இருக்கும் வண்ணக் கலவை எப்படி தெரிகிறது என்பதை பார்த்து தெரிந்து கொள்ளலாமாம். இரண்டு ஆண்டுகளாகவே இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி ராதிகா, ரம்யாகிருஷ்ணன், ஸ்ருதி. இந்த ஆண்டு விளம்பரத்திற்கு ராதிகாதான் வந்து பெயிண்ட் விற்பனை செய்கிறார்.
கவிதையாய் பொங்கல் விளம்பரம்
இதுவும் ஒரு பெயிண்ட் விளம்பரம்தான். பல ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விளம்பரம் இது. பொங்கல் கொண்டாட்டம் பற்றி குட்டி படம் போல ஏ.ஆர்.ரகுமான் இசையில் சொல்லியிருப்பார்கள். இன்றைக்கு பார்த்தாலும் புதிதாக இருக்கிறது இந்த விளம்பரம்.
காதலை சொல்லும் கோ ஆப்டெக்ஸ்
கோ ஆப் டெக்ஸ் என்றாலே வண்ணத்துப்பூச்சிதான். இது பட்டுப்புடவையின் வர்ணத்தை சொல்கிறது. கூடவே காதலையும் உணர்த்துகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பான பொங்கலுக்கான விளம்பரம்.
பிரபுதேவா - டோணி
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை விளம்பரம் என்றால் அது பிரபுதேவா - டோணி இணைந்து நடித்துள்ள மோட்டார் பைக் விளம்பரம்தான். கிரிக்கெட் ஆடும் டோணி டான்ஸ் ஆடுகிறார் என்றால் அவரது ரசிகர்கள் ரசிக்கத்தானே செய்வார்கள்.
மலேசியா பொங்கல்
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பான இந்த பொங்கல் விளம்பரம் தற்செயலாய் கண்ணில் பட்டது. இந்த விளம்பரம் பொங்கல் பண்டிகை பற்றி பெருமிதமாய் சொல்கிறது.
மறக்கப்படுகிறதா தமிழர் திருநாள்
கிராமங்களில் மட்டுமே இன்றைக்கு பொங்கல் பண்டிகைகள் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் கடற்கரையில் காணும் பொங்கலன்று கூடுவதுதான். மண்பானையில் பொங்கலிடுவது குக்கர் பொங்கலாய் மாறிவிட்டது. விசில் கூட இல்லை எலக்ட்ரிக் ரைஸ் குக்கரில் பொங்கல் வைக்கும் அளவிற்கு டெக்னாலஜி வளர்ந்து விட்டது.
பண்டிகை விளம்பரங்கள்
பொங்கல் பண்டிகைக்காக வெளியாகும் தொலைக்காட்சி விளம்பரங்கள் கூட அரிதாகி வருகின்றன. தீபாவளியும், ஆங்கில புத்தாண்டு, காதலர் தினம் போன்ற கொண்டாட்டங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வர்த்தகங்கள் நடைபெறுவது போல ஒரு மாயையை ஏற்படுத்துவதாக உள்ளது. விளம்பரங்களில் கூட பொங்கலை நினைவூட்டுவதை மறந்து வருகின்றனர்.