சென்னை, புறநகரில் கனமழை- பல பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு
சென்னையின் பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது. புறநகரில் இடியுடன் மழை பெய்வதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையின் நகர் புறங்களிலும், புறநகரிலும் கனமழை பெய்து வருகிறது. இடியுடன் கொட்டித்தீர்க்கும் கனமழையால் பல இடங்களில் மன்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
திடீர் மழையால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்வதற்காக திரண்ட பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வட தமிழக உள்மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என்று கூறினார் பாலச்சந்திரன். வானிலை ஆய்வு மையம் கணித்தது போலவே சென்னையின் பல பகுதிகளில் மாலை முதலே கனமழை கொட்டித்தீர்க்கிறது.
வட சென்னையிலும், தென் சென்னையிலும் புறநகரிலும் கனமழை கொட்டித்தீர்க்கிறது. பல்லாவரம், குரோம்பேட்டையில் கனமழை பெய்கிறது. அண்ணாநகர், முகப்பேர் பகுதிகளில் கனமழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு பகுதியில் பெய்து வரும் மழையால் வெளியூர் செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்கிறது. அம்பத்தூர், பாடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இடியுடன் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு பகுதியில் பெய்யும் கனமழையால் வடபழனி, ஜிஎஸ்டி சாலையிலும் பெருங்களத்தூர் வரையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.