மத்திய அரசின் எந்த திட்டத்துக்குமே தமிழக அரசு ஒத்துழைப்பதே இல்லை: பிரகாஷ் ஜவடேகர் பொளேர்
திண்டுக்கல்: மத்திய அரசின் எந்த ஒரு திட்டத்துக்குமே தமிழக அரசு ஒத்துழைப்பு தருவதே இல்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சாடியுள்ளார்.
திண்டுக்கல்லில் இன்று செய்தியாளர்களிடம் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:
கடந்த 50 ஆண்டுகால அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆட்சியில் ஊழல் மட்டுமே அதிகரித்துள்ளது. தமிழகம் எந்த துறையிலும் வளர்ச்சியடையவில்லை. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் மிகவும் பின் தங்கியுள்ளது.
இலவசங்களால் சீரழிவு
இலவசங்களை கொடுத்து மக்களை சீரழித்துள்ளனர். இதனால் பொருளாதாரமும் பாழாகிவிட்டது. பாஜக அரசால் மட்டுமே தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வர முடியும்.
ஒத்துழைப்பு இல்லை
மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு திறனறிவு, கல்வி அறிவு அளித்து அவர்களின் வாழ்க்கை தரத்தை நாங்கள் உயர்த்துவோம். தமிழக நலனுக்காக மத்திய அரசு கொண்டு வரும் எந்த திட்டத்துக்கும் அ.தி.மு.க. அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை.
உதய், ஆப்டிகல் பைபர் திட்டம்
பல மாநிலங்களில் உதய் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழகம் இதனை ஏற்க மறுத்து பொய்யான தகவலை தெரிவிக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள 21 லட்சம் கிராமங்களை இணைக்கும் வகையில் நேஷனல் ஆப்டிக்கல் பைபர் நெட்வொர்க் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமங்கள் வளர்ச்சியடைந்து தன்னிறைவு பெறும். அரசின் திட்டங்களை மக்கள் முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.
மத்திய அரசு கிராம மக்களுக்கு அளிக்கும் சலுகைகள் விவசாய விளை பொருட்களுக்கான விலை நிலவரங்களை தெரிந்துகொள்ள முடியும். இதற்கும் தமிழக அரசு ஒத்துழைப்பு இல்லை.
கஸ்தூரி ரங்கன் அறிக்கை
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி பாதுகாப்புக்காக பரிந்துரைக்கப்பட்ட கஸ்தூரி ரங்கன் திட்ட அறிக்கை குறித்து குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் பதிலளித்துள்ளன. ஆனால் தமிழகம் இதுவரை எந்தவித பதிலும் அளிக்கவில்லை.
இதுபோன்ற செயலற்ற அ.தி.மு.க. அரசை மக்கள் மாற்றி பாரதிய ஜனதாவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.