கட்சியில் பொருளாதாரம் இல்லை.. கூட்டணி வைப்பதே அதுக்குதான்.. பிரேமலதா விஜயகாந்த் ஓபன் டாக்
கள்ளக்குறிச்சி: கட்சியில் பொருளாதாரம் இல்லை என்பதாலேயே கூட்டணி வைக்கிறோம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெறுவதற்காக பகீரத முயற்சிகளை தேமுதிக மேற்கொண்டது. கூட்டணி பேச்சுவார்த்தையை உடனே தொடங்குங்கள் என பிரேமலதா விஜயகாந்த் கெஞ்சி பார்ததார்.

ஆனால் அதிமுகவோ பாமகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடிவு செய்வதில் மட்டும் தீவிரமாக இருந்தது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து தேமுதிக தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்தை அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் குழு நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தை நடந்த போது பிரேமலதா விஜயகாந்த், கள்ளக்குறிச்சி தேமுதிக கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.
சசிகலா பாணியில் பிரேமலதாவுக்கு கள்ளக்குறிச்சி தேமுதிக தொண்டர்கள் வரவேற்பு கொடுத்தனர். கள்ளக்குறிச்சி பொதுக்கூட்ட மேடையை பிரேமலதா சென்றடைய 4 மணிநேரமானது. அந்த கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:
கள்ளக்குறிச்சி மாவட்டம் மீது விஜயகாந்த் அதிக பற்று வைத்துள்ளார். இறுதிகட்ட பிரச்சாரத்துக்கு விஜயகாந்த் வருவார். தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் அறிவிப்பார். நமது தன்மானத்தை அவர் தலைகுனிய வைக்க மாட்டார். நாம் தனித்துப் போட்டியிட தயாராக இருக்கிறோம். ஆனால் கட்சியின் பொருளாதாரம் காரணமாக கூட்டணி பற்றி பேசுகிறோம்.
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.












Click it and Unblock the Notifications