கட்டணம் கட்டுப்படி ஆகாததால் பிரீமியம் ரயிலை புறக்கணித்த மக்கள்
நெல்லை: கோடை விடுமுறையை முன்னிட்டு கூடுதல் கட்டணத்தில் தெற்கு ரயில்வே அறிவித்த பிரீமியம் ரயிலை பொதுமக்கள் புறக்கணித்ததால் அந்த ரயிலை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்தது. புதிய கோடை ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோடை விடுமுறை விடப்பட்டு விட்டதால் பலரும் குடும்பத்துடனும், குழந்தை குட்டிகளுடன் வெளி ஊர்களுக்கு படையெடுத்து விட்டனர். இன்னும் பலர் மூட்டை முடிச்சுகளுடன் கிளம்ப தயாராகி விட்டனர்.
இதனால் நெல்லை-சென்னை செல்லும் எந்த ரயிலிலும் முன்பதிவு டிக்கெட் காலி இல்லை. இந்த காரணத்தால் பயணிகளின் கூட்ட நெரிசலை பயன்படுத்தி வருவாயை மட்டும் குறிக்கோளாக கொண்டு கூடுதல் கட்டணத்துடன் (தட்கல் டிக்கெட்) பிரீமியம் சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்தது.
ஆனால் கட்டணம் அதிகம் என்பதால் பொதுமக்கள் இந்த ரயிலை அடியோடு புறக்கணித்தனர். இதனால் வரும் 25 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நெல்லை-சென்னை சென்டரல் பிரீமியம் ரயில் எண் 06746 ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து மதுரை கோட்ட முதன்மை மக்கள் தொடர்பு அலுவலர் கூறியதாவது, "பிரீமியம் சிறப்பு ரயிலுக்கு வரவேற்பு இல்லாததால் ரத்து செய்யப்படுகிறது. இதற்கு பதிலாக கோடை சிறப்பு ரயில் 25 ஆம் தேதி காலை நெல்லையிலிருந்து 6.35 மணிக்கு புறப்பட்டு இரவு 7.55 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையும் வந்தடையும்.
இந்த ரயிலில் இரண்டு அடுக்கு ஏசி பெட்டி, 6 மூன்று அடுக்கு ஏசி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதியுள்ள பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், மோகனூர், நாமக்கல், ராசிபுரம், சேலம், பொம்மிடி, மொரப்பூர், ஜோலார்பேட்டை, வானியம்பாடி, குடியாத்தம், காட்பாடி, அரகோணம், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications