ஜல்லிக்கட்டு விவகாரத்தை பொறுமையாகத்தான் கையாள வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்
காஞ்சிபுரம்: ஜல்லிக்கட்டு போட்டிகளை முற்றிலுமாக தடை செய்ய வாய்ப்பு உள்ளதால் இந்த விவகாரத்தை பொறுமையாகத்தான் கையாள வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையொட்டி நடக்கவிருந்த ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இது தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஜல்லிக்கட்டுக்கு தடை கிடைக்க தமிழகத்தில் உள்ள ஒருசில அமைப்புகளே காரணம் என்றும் இவர்களே ஜல்லிக்கட்டுக்கு ஒட்டுமொத்த தடை விதிக்க முயல்வதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், " ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடையை அடுத்து இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களுடன் பேச நாளை தமிழக பாஜக குழு டெல்லி செல்ல முடிவெடுத்திருந்தோம். ஆனால் ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராம் மத்திய அரசின் நிலைப்பாட்டை தெளிவாக கூறிவிட்டபடியால் இந்த பயணத்தை ரத்து செய்துள்ளோம் என்றார்.
ஜல்லிக்கட்டுக்கு முற்றிலுமாக தடை கிடைக்கவே வாய்ப்புள்ள நிலையில் நாம் இதில் அவசரப்பட்டு இருப்பதையும் இழந்துவிடக்கூடாது. இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில் பொருமையாகத்தான் கையாள வேண்டும். தமிழக அரசின் நடவடிக்கையைப் பொறுத்து மத்திய அரசின் நடவடிக்கை இருக்கும் என்றார் பொன்.ராதகிருஷ்ணன்.
நாளை மறுதினம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டாவது நடைபெறுமா ? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடம் எழுந்துள்ளது.