சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற திடீர் மனு!
பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்று சிறைக்கைதிகள் உரிமை மையம் மனு அளித்துள்ளது.
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலாவை சென்னை சிறைக்கு மாற்ற வேண்டும் என்று இரு மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
அளவிற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தண்டனை பெற்று சசிகலா கடந்த பிப்ரவரி மாதம் முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார். சிறையில் சசிகலாவிற்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டிருப்பதாக டிஐஜியாக நியமிக்கப்பட்ட ரூபா கூறியிருந்தார்.
இதனையடுத்து சசிகலாவிற்காக 5 அறைகள் மாற்றப்பட்டுள்ளது, சசிகலா வெளியே சென்று வருவது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் குற்றச்சாட்டுகளையடுத்து சசிகலாவிற்கு அளிக்கப்பட்ட சலுகைகள் நிறுத்தப்பட்டதையடுத்து, அவர் பெங்களூரின் வேறு சிறைக்கு மாற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வழக்கறிஞர் புகழேந்தியின் சிறைக்கைதிகள் உரிமை மையம் மனு அனுப்பியுள்ளது. தமிழக தலைமை செயலாளர் மற்றும் கர்நாடக தலைமை செயலாளருக்கு இந்த மனு அனுப்பப்பட்டுள்ளது.
Prisoners Rights Forum's Advocate #Pugalendhi petitioned to TN, KA Chief Secretaries seeking prisoner #Sasikala 's jail transfer to TN pic.twitter.com/b9DJdI47Yw
— Mahalingam Ponnusamy (@mahajournalist) July 20, 2017
அதில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படியும், ஐநா மனித உரிமை விதிப்படியும் ஒரு கைதி தனது வசிக்குமிடத்திற்கு மிக அருகில் உள்ள சிறையில் அடைக்கப்பட வேண்டும். குடும்பத்தாரை சந்திக்க வசதியாக விதிக்கப்பட்டுள்ள இந்த சட்ட விதியின்படி சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.