"மினி கூவத்தூர்".. ஆதரவு எம்எல்ஏக்களை ஸ்டார் ஹோட்டலில் மொத்தமாக தங்க வைத்த தினகரன் குரூப்!!
சென்னை: சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பலத்த பாதுகாப்புடன் தனது ஆதரவு எம்எல்ஏக்களை தினகரன் தரப்பு தங்க வைத்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பலத்த பாதுகாப்புடன் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு மொத்தமாக இவர்கள் ராஜ்பவனுக்கு கூட்டி வரப்பட்டுள்ளனர். யாரும் எதிர்த் தரப்புக்கு தப்பி விடக் கூடாது, போய் விடக் கூடாது என தீவிர கண்காணிப்பிலும் இவர்கள் வைக்கப்பட்டுள்ளனராம்.
முன்பு சசிகலா இருந்தபோது இப்படித்தான் அதிமுக உடைந்த சமயத்தில், ஓபிஎஸ் அணிக்கு யாரும் போய் விடக் கூடாது என்பதற்காக கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டுக்குக் கொண்டு போய் தனது ஆதரவு எம்எல்ஏக்களை அடைத்து வைத்தார் தினகரன். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மினி கூவத்தூர்
தற்போது அதிமுகவின் இரு பிரிவுகள் இணைந்துள்ள நிலையில் சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டலை மினி கூவத்தூராக மாற்றியுள்ளது தினகரன் தரப்பு.
பலத்த கண்காணிப்பு
இங்குதான் தனது ஆதரவு எம்எல்ஏக்களை தினகரன் தரப்பு தங்க வைத்துள்ளதாக சொல்கிறார்கள்., பலத்த கண்காணிப்புக்கு மத்தியில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனராம். யாரும் தப்பி விடக் கூடாது என்று கண்காணிக்கப்படுகின்றனராம்.
மொத்தமாக ராஜ்பவனுக்கு வந்தனர்
அங்கிருந்துதான் இன்று காலை இவர்களை பத்திரமாக ராஜ்பவனுக்குக் கூட்டி வந்துள்ளனர். மீண்டும் ஒரு கூவத்தூர் காலத்தை நோக்கி தமிழகம் போகுமா அல்லது புதுத் தேர்தலுக்குத் தயாராகுமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.
கூவத்தூருக்குப் பிறகு சசிகலா கதி
கூவத்தூர் கேம்ப்பின்போதுதான் சசிகலா சிறைக்குப் போக நேரிட்டது. தற்போது தினகரன் தரப்பு அதேபோன்ற பெரும் சிக்கலை சந்தித்துள்ளது. இது அந்தத் தரப்புக்கு சற்றே கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால்தான் நிதானம் காட்டுவதாகவும் சொல்லப்படுகிறது