கோவை வ.உ.சி. மைதானத்தில் 4-வது நாளாக லட்சக்கணக்கானோர் கூடி எழுச்சிமிகு போராட்டம்!
கோவை வ.உ.சி. மைதானத்தில் ஜல்லிக்கட்டு புரட்சியாளர்கள் லட்சக்கணக்கில் ஒன்று திரண்டு எழுச்சிமிக்க போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
கோவை: தமிழர் பண்பாட்டு உரிமையான ஜல்லிக்கட்டு மீட்பு உரிமை புரட்சி கோவையை குலுங்க வைத்துக் கொண்டிருக்கிறது. கோவை வ.உ.சி. மைதானத்தில் 4-வது நாளாக இன்றும் லட்சக்கணக்கானோர் ஒன்று திரண்டு ஜல்லிக்கட்டு உரிமை மீட்பு முழக்கங்களை எழுப்பினர்.
அலங்காநல்லூரில் தொடங்கிய ஜல்லிக்கட்டு புரட்சி தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் பிரளயமாக வெடித்துக் கொண்டிருக்கின்றன. சென்னை மெரினா கடற்கரையில் 3 லட்சம் பேர் குடும்பம் குடும்பமாக திரண்டுள்ளனர்.

மதுரை புரட்சியாளர்கள் அந்த மாநகரையே தங்களது கட்டுப்பாட்டில் வைத்து தனித்தீவாக்கினர். நெல்லை, சேலம் என அனைத்து நகரங்களுமே வரலாறு கண்டிராத புரட்சியின் வசமாகிவிட்டது.

கோவை, திருப்பூர், உதகையிலும் லட்சக்கணக்கானோர் வரலாற்று சிறப்புமிக்க ஜல்லிக்கட்டுப் புரட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். கோவை வஉசி மைதானத்தில் 4-வது நாளாக இன்றும் லட்சக்கணக்கானோர் பேரெழுச்சியாக புரட்சி ஜோதியில் ஐக்கியமாகினர்.

சென்னை மெரினாவை நோக்கி குடும்பம் குடும்பமாக திரள்வதைப் போல கோவை வஉசி மைதானத்தை நோக்கி சாரை சாரையாக மக்கள் பெருவெள்ளம் படையெடுத்து ஆர்ப்பரிக்கிறது. இரவென்ன... பகலென்ன வாடிவாசல்கள் திறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு காளைகள் சீறிப் பாயும் வரை தமிழினத்தின் இந்த வரலாற்று தியாக வேள்வி ஓய்ந்துவிடப் போவதில்லை!












Click it and Unblock the Notifications