அவங்க ஆயிரம் சொல்லட்டும், நீங்க எப்படி "சின்னம்மா"வை ஒதுக்கலாம்.. எடப்பாடியிடம் சீறிய "தங்கம்"
சசிகலாவை ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் சொன்னாலும் அமைதியாக இருந்தது ஏன் என்று எடப்பாடி பழனிச்சாமியைப் பார்த்து பாய்ந்துள்ளார் தங்கத்தமிழ் செல்வன்.
சென்னை: சசிகலா, தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து பேசியதுதான் இப்போது ஹாட் டாபிக். தொகுதி பிரச்சினைக்காக சந்தித்து பேசுவதாக சொன்னாலும் அது வேற மேட்டருங்கோ என்கின்றனர்.
அமைச்சர்கள் ஜெயக்குமாரும், வேலுமணியும், சசிகலாவை ஒதுக்கி வைப்பதாக சொன்னாலும் நீங்க அமைதியாக இருக்கலாமா? என்று எடப்பாடி பழனிச்சாமியிடம் பாய்ந்திருக்கின்றனர். அதற்கு அவரோ, நான் அப்படி எங்கேயுமே சொல்லலையே என்று பம்மினாராம்.
கடந்த 6 நாட்களில் முதல்வர் எடப்பாடியை ஆதரித்து வரும் எம்எல்ஏக்கள், அணி அணியாக வந்து தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும், கூவத்தூர் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி வருவதால் தமிழக அரசியலில் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.
ஆடும் நாற்காலி
என்னதான் 122 எம்எல்ஏக்களுடன் முதல்வர் நாற்காலியில் கெத்தாக எடப்பாடி பழனிச்சாமி அமர்ந்திருந்தாலும் அது இப்பவோ, எப்பவோ என்று ஆடிக்கொண்டுதான் இருக்கிறது. தற்போதுள்ள சூழ்நிலையில், எடப்பாடி அரசுக்கு ஆதரவு அளித்து வரும் 5 எம்எல்ஏக்கள் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றால் ஆட்சி கவிழும் ஆபத்து உள்ளது.
செந்தில் பாலாஜி அணி
கடந்த திங்கட்கிழமை முன்னாள் அமைச்சர்களும் தற்போது எம்எல்ஏக்களாகவும் உள்ள தோப்பு வெங்கடாசலம், செந்தில் பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்ட 8 எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடியை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினர். அவர்கள் தொகுதி பிரச்சினையை பேசவில்லை. தங்களின் பிரச்சினையை பேசியுள்ளனர்.
அடுத்து 10 பேர்
கடந்த செவ்வாய்க்கிழமை எடப்பாடி அரசுக்கு ஆதரவு தெரிவித்து வரும் 10 எம்எல்ஏக்கள் முதல்வரை சந்தித்து, அமைச்சர் பதவி தர வேண்டும் என்றும் கூவத்தூரில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்
பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல், ஆண்டிப்பட்டி தங்கத் தமிழ்ச்செல்வன் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். இவர்கள் இருவரும் தீவிரமான டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள். சமீபத்தில் சிறையில் சசிகலாவைச் சந்தித்துவிட்டு வந்த இவர்கள் முதல்வரை சந்திக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சசிகலாவின் தயவு
சசிகலாவின் தயவினால்தான் நீங்கள் முதல்வர் ஆகியிருக்கிறீர்கள். அவருக்கு நீங்க நம்பிக்கை துரோகம் செய்யலாமா? என்று கேட்டாராம் எம்எல்ஏ வெற்றிவேல்.
தங்கத் தமிழ்செல்வன்
ஜெயகுமாரும், வேலுமணியும் ஆயிரம் சொல்லட்டும். நீங்க எப்படி சின்னம்மா குடும்பத்தை கட்சியை விட்டு ஒதுக்கி வைக்கலாம்னு சொன்னதை ஒப்புக்கலாம் என்று எடுத்த எடுப்பிலேயே கோபமாக கேட்டாராம் தங்கத் தமிழ் செல்வன்.
பம்மிய ஈபிஎஸ்
அதற்கு எடப்பாடி பழனிசாமியோ, அது அவங்களோட கருத்து. நான் எந்த இடத்துலயும் அதை பற்றி பேசவேயில்லையே என்று சொன்னாராம். நான் எதிர்ப்பை காட்டியிருந்தா அது ஆட்சிக்கு கூட சிக்கலா வந்திருக்கும். அதனாலதான் நான் அமைதியா இருக்கேன். நான் எப்பவும் சசிகலா பக்கம்தான் என்பதை சொல்லுங்க என்று நம்பிக்கையாக சொன்னாராம் ஈபிஎஸ்.
முதல் ஆள் நான்தான்
இருவரையும் கட்சியை விட்டு ஒதுக்குறோம்னு எங்கேயும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவேயில்லையே என்று சொன்ன முதல்வர் பழனிச்சாமி, அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் அதை முதல்ல எதிர்க்கும் ஆள் நானாகத்தான் இருப்பேன் என்று உறுதியாக சொல்லி அனுப்பியிருக்கிறாராம். கோபமாக வந்தவர்கள் இதைக் கேட்டு கூல் ஆக திரும்பியுள்ளனர்.
இணையுமா? இணையாதா?
அப்போ சசிகலா, தினகரனை ஒதுக்கி வைப்பதாக சொன்னது எல்லாம் வெறும் வாய் வார்த்தைதானா? ஓபிஎஸ் அணியோ சசிகலா குடும்பத்தை நீக்கினால்தான் இணைய சம்மதம் என்கின்றனர். ஈபிஎஸ் இப்போது சொன்னதை வைத்து பார்த்தால் உடைந்த கட்சி ஒட்டாது போலிருக்கே.