ரூ500 கட்டு பெட்டிகளை குறிவைத்து கொள்ளை- ரயிலில் பணம் வரும் தகவலை லீக் செய்த கருப்புஆடு யார்?
சென்னை: சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் ரூ500 கட்டுகள் இருந்த பெட்டிகளை மட்டுமே குறிவைத்து கொள்ளையடிக்கப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்படியானால் ரயிலில் பணம் வரும் தகவலை கொள்ளையர்களுக்கு முன்னரே மிகச் சரியாக கூறியது யார்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சேலத்தில் இருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு ரயில் மூலம் பணத்தைக் கொண்டு வரும் போது, வழியில் ரயில் பெட்டியின் மேற்கூரை உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது.
பணம் வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியின் மேற்கூரை, வெல்டிங் மெஷின் மூலம் ரயிலின் உள்ளே ஒரு நபர் செல்லும் அளவுக்குக் கூரை துளையிடப்பட்டு, லட்சக்கணக்கான பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

ரூ10, ரூ 100 பண்டல்கள்...
இந்த கொள்ளைச் சம்பவம் எங்கே நடந்தது? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரயில் பெட்டியில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சொந்தமான பணம் என்று தெரியவந்துள்ளது. மொத்தம் 6 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சொந்தமான பணத்தில், 10 ரூபாய், 100 ரூபாய் பண்டல்களை கொண்ட 2 பெட்டிகளை கொள்ளையர்கள் உடைத்து மட்டும் பார்த்து உள்ளனர்.
ரூ500 பண்டல்கள்
500 ரூபாய் கட்டுகள் உள்ள பெட்டிகளை மட்டும் குறிவைத்து கொள்ளையர்கள் உடைத்து உள்ளனர். 500 ரூபாய் உள்ள 115 கட்டுகளை கொள்ளையர்கள் அள்ளிச் சென்றுள்ளனர். கொள்ளை போன பணம் நைந்து போனதாக இருந்தாலும், அதில் ஓரளவு செல்லத்தக்க பணம் இருந்ததாகவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதல் முறை...
இது தொடர்பாக ரயில்வே ஐ.ஜி.ராமசுப்பிரமணி கூறுகையில், முதல்முறையாக இதுபோன்று ரயில் பெட்டி மேற்கூரையை துவாரம் போட்டு கொள்ளை சம்பவம் நடந்து உள்ளது. திட்டம் போட்டு ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதுகிறோம்.

ரயில்வே போலீசிடமும் விசாரணை
ரயில் பெட்டியில் பாதுகாப்புக்காக வந்த போலீசாரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. சேலத்தில் புறப்பட்ட இந்த ரயில் வழியில் 10 இடங்களில் நின்று உள்ளது. எனவே இந்த 10 இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. அங்கு இருக்கக்கூடிய கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications