கருணாநிதியிடம் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தட்டிப் பறித்த ஸ்டாலின்: ஓ.பி.எஸ். தாக்கு
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியிடம் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மு.க.ஸ்டாலின் தட்டிப் பறித்ததாக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சாடியுள்ளார்.
சட்டசபையில் 89 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட திமுகவின் 3 உறுப்பினர்கள் பேச அனுமதிக்க வேண்டும் என்று சபாநாயகர் தனபாலிடம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். ஆனால் திமுக சார்பில் 2 பேருக்குத்தான் பேச வாய்ப்பு தரப்படும் என சபாநாயகர் தனபால் கூறியிருக்கிறார்.
இதற்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்ததுடன், 2 நாட்கள் விடுமுறை உள்ளது. பொறுத்திருந்து பார்ப்பதாக கூறிவிட்டு வந்துள்ளோம். சபாநாயகர் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராவிட்டால் தி.மு.க. தரப்பில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை கட்சி தலைவருடன் கலந்தாலோசித்து முடிவு செய்வோம் எனக் கூறியிருந்தார்.
மரபுக்கு முரணானது
இந்த விவகாரம் தொடர்பாக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் கடைசி நாளான்று, எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றி, அதன்பின் முதல்வர் பதிலளிக்கவும், தங்களது உறுப்பினர்கள் 3 பேர் பேச வாய்ப்பு அளிக்க வேண்டுமெனவும் திமுகவினர் வலியுறுத்தினர். இதுகுறித்து, அலுவல் ஆய்வுக் குழுவில் விரிவாக விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே, பேரவைத் தலைவரின் முடிவு குறித்து விமர்சிப்பதோ, பேட்டியளிப்பதோ அவையின் மரபுக்கு முரணானது.
அதிமுகவுக்கே 3 தான்...
பேரவை விதிப்படி, ஒரு தீர்மானத்தின் மீது பேரவைத் தலைவர் அழைக்கின்ற வரிசையில்தான் உறுப்பினர்கள் பேச வேண்டும். விவாத உரைகளுக்கான கால வரம்பையும் பேரவைத் தலைவரே நிர்ணயிப்பார். சட்டப் பேரவையில் 132 உறுப்பினர்களைக் கொண்டுள்ள அதிமுகவின் சார்பில் 3 உறுப்பினர்கள் பேச அனுமதிக்கப்பட்டுள்ளது.
திமுகவுக்கு 2
89 உறுப்பினர்களைக் கொண்ட திமுக சார்பில் 2 உறுப்பினர்கள் தான் பேச முடியும். கடந்த 5 ஆண்டுகளில் பேரவையில் கடைப்பிடித்த நடைமுறையைப் பின்பற்றி, ஆளுநர் உரை மீதான விவாதத்தின் கடைசி நாளுக்கு முதல் நாள், எதிர்க்கட்சித் தலைவர் உள்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் பேசிய பிறகு, கடைசி நாள் முதல்வர் உரையாற்றலாம் என்று பேரவைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
தட்டிப் பறித்த ஸ்டாலின்
கருணாநிதியின் குடும்பத்துக்குள் இருக்கும் பிரச்னைகளை மறைப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், பேரவைத் தலைவர் மீது குற்றஞ்சாட்டி பொய்யான தகவல்களைத் தெரிவித்துள்ளார். அதன் மூலம் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கருணாநிதியிடம் இருந்து தட்டிப் பறித்ததை மறைத்து விடலாம் என ஸ்டாலின் நினைக்கிறார்.
அன்பழகனை கண்டிக்காத ஸ்டாலின்
பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன், பேரவைத் தலைவரை ஒருமையில் பேசி இழிவுபடுத்தியுள்ளார். இதைக் கண்டும் காணாமல் ஸ்டாலின் அமைதி காத்துள்ளார். அன்பழகனை ஸ்டாலின் கண்டித்திருக்க வேண்டாமா? அவ்வாறு செய்யாமல் வேடிக்கை பார்ப்பதுதான் மரபுகளை கடைப்பிடிக்கும் முறையா?
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.