தேர்தல் விதிமீறல்: நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் விடுவிப்பு
திருநெல்வேலி: தேர்தல் நடத்தை விதி மீறியதாக புகார் எழுந்ததை அடுத்து திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (டிஆர்டிஏ) திட்ட இயக்குநராக கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக பணியில் இருந்த அ.விஜயகுமார், அப்பணியிலிருந்து விடுவிக்கப் பட்டிருக்கிறார்.
இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான மு.கருணாகரன் பிறப்பித்திருக்கும் உத்தரவு;
திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.விஜயகுமார் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதால், அவரை 7.3.2016ம் தேதி பிற்பகல் பணியிலிருந்து விடுவித்து உத்தரவிடப்படுகிறது. அவரின் பொறுப்புகளை, மாவட்ட ஆட்சியர் கூடுதலாக கவனிப்பார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் கருணாகரனுக்கும், விஜயகுமாருக்கும் இடையே கடந்த ஓராண்டு காலமாகவே பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பனிப்போர் நிலவிவந்தது. இதனால், ஆட்சியர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் விஜயகுமாரை அவ்வளவாக பார்க்க முடியவில்லை. தற்போது விஜயகுமாரை பணியிலிருந்து விடுவித்ததன் மூலம் அந்த பனிப்போர் முடிவுக்கு வந்திருக்கிறது என்று ஊரக வளர்ச்சி முகமை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட கடந்த 4ம் தேதி பிற்பகல் 3 மணிக்குப்பின் அரசு அலுவலர்கள் எந்த திட்டங்களுக்கான கோப்புகளிலும் கையெழுத்திடக் கூடாது என்பதை தேர்தல் ஆணையம் கண்டிப்புடன் தெரிவித்திருந்தது. அவ்வாறு கையெழுத்திட்டால் அது தேர்தல் நடத்தை விதிமீறலாகும்.
இந்நிலையில், கடந்த 5ம் தேதி நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் விஜயகுமாரிடமிருந்து, மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரனுக்கு 4 கோப்புகள் கையெழுத்துக்காக வந்தன. அந்த கோப்புகள் அனைத்தும் முன்தேதியிட்டு, அதாவது 4ம் தேதியிட்டு தயாரிக்கப்பட்டிருந்தன.
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஊரக வளர்ச்சி முகமை மூலம் ரூ.274 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை மேற்கொள்வதற்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பான கோப்பு அதில் முக்கியமானது. இவ்வாறு கோப்புகளை கையெழுத்துக்கு அனுப்பியது தேர்தல் நடத்தை விதிமீறலாகும் என்பதால் விஜயகுமார் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. மேலும், தனக்கு கீழ் பணிபுரியும் 42 அலுவலர்களை தேர்தல் பணிக்கு செல்லவிடாமல் விஜயகுமார் தடுத்ததும் மற்றொரு காரணமாக சொல்லப்படுகிறது.