அவினாசியில் ஆ. ராசாவை மடக்கி கேள்வி மேல் கேள்வி கேட்ட போராட்டக்காரர்கள்
நீலகிரி: திமுக வேட்பாளர் ஆ. ராசாவை மறித்து கேள்வி கேட்டு முற்றுகையிட்டவர்களுடன் சேர்ந்து அவர் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ. ராசா அவினாசி ஒன்றியத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவினாசி அருகேயுள்ள தெக்கலூர் என்ற பகுதிக்கு அவர் சென்ற போது அவினாசி-அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் போராட்டக் குழுவினர் அவரது வாகனத்தை திடீரென மறித்து, முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தொகுதி எம்.பி.யாக 5 ஆண்டுகள் இருந்துள்ளீர்கள், அமைச்சராக வேறு இருந்துள்ளீர்கள். திட்டத்தை ஏன் நிறைவேற்றவில்லை எனக் கேள்வி கேட்டனர்.
இதற்குப் பதில் அளித்த ராசா, 2009ம் ஆண்டில் திட்டம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தி அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியிடம் அறிக்கை அளிக்கப்பட்டது. பின்பு திமுக ஆட்சி மாறியது. அதற்குப் பின் 2ஜி வழக்கில் சிறையில் இருந்ததால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. எனவே, நீங்கள் என்னை மீண்டும் எம்.பி.யாகத் தேர்வு செய்தால் அந்த திட்டத்தை உறுதியாக நிறைவேற்றுகிறேன் என்று வாக்குறுதி அளித்தார்.
மேலும், இதை சற்றும் எதிர்பாராத ராசா ஓரிரு விநாடிகளில் சுதாரித்துக் கொண்டு போராடுவோம், போராடுவோம்.. மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகப் போராடுவோம் என அவரும் போராட்டக்காரர்களுடன் இணைந்து தரையில் அமர்ந்து கோஷமிட்டார்.
மேலும், உங்களுடன் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தயாராக இருக்கிறேன் என உணர்ச்சிவசப்பட்டு தெரிவித்தார்.