அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை, கோவை, மதுரையில் கொந்தளிக்கும் மாணவர்கள்
மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள புது கல்லூரி மாணவர்கள் இன்று காலை முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள புது கல்லூரி மாணவர்கள் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரியலூர் மாணவி அனிதா கடந்த வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. சென்னை தொடங்கி குமரி வரை கடந்த 4 நாட்களாக மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
புதுக்கல்லூரி மாணவர்கள்
ராயப்பேட்டையில் உள்ள புது கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்யும் வரை போராட்டம் நீடிக்கும் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு கலை கல்லூரி மாணவர்கள்
கோவையில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கலைக்கல்லூரி முன்பாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கொந்தளிப்பில் மாணவர்கள்
காரைக்குடியில் உள்ள அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள், அழகப்பா பொறியியல் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
சட்டக்கல்லூரி மாணவர்கள்
மதுரையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு மாவட்ட நீதிமன்றம் முன்பு மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நீட் தேர்வை ரத்து செய்யவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாணவர்களின் சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.