புதுவையில் ஆசிரியர் வீட்டில் திருட்டு: தந்தை, 2 மகன்கள் கைது- 85 பவுன் நகைகள் மீட்பு
புதுவை: புதுவையில் ஆசிரியர் வீட்டில் நகை, பொருட்களை திருடிய தந்தை மற்றும் இரண்டு மகன்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 85 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புதுவை ரெயின்போ நகர் 7-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜகோபால்(46) என்ற தனியார் பள்ளி ஆசிரியர். இவரது மனைவி சசிகலா(41) மின் துறையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 24-ந் தேதி இவர்களது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த நகைகள், வெள்ளி பொருட்கள், வைரநகைகள், விலை உயர்ந்த பட்டுப்புடவைகள் திருடப்பட்டு இருந்தன.
இது தொடர்பாக பெரியகடை போலீஸ் நிலையத்தில் ராஜகோபால் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வந்தனர். குற்றவாளிகளை பிடிக்க சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ஓம்வீர்சிங் உத்தரவின் பேரில் வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.
அப்போது கொள்ளை நடந்த பகுதியில் உள்ள வீடுகள், கடைகளில் இருந்த கண்காணிப்பு கேமரா மூலம் 3 பேர் கொண்ட கும்பல் அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் அடிக்கடி சுற்றி திரிந்தது தெரியவந்தது.
அதனடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அது புதுக்கோட்டை காமராஜபுரத்தை சேர்ந்த முகமது யூசுப்(65), அவரது மகன்கள் மொய்தீன்(27), சாதிக் பாட்ஷா(24) என்பது கண்டுபிடிக்கப் பட்டது. மேலும் அவர்கள் மீது ரெட்டியார்பாளையம், கோரிமேடு காவல்நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் போலீசாருக்குத் தெரியவந்தது.
மேற்கொண்டு நடத்திய விசாரணையில், யூசுப் தனது மகன்களுடன் புதுவை என்ஜினீயரிங் காலனியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார், குற்றவாளிகளைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் ஆசிரியர் ராஜகோபால் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டதோடு, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திருடியதாகவும் தெரிவித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் 3 பேரிடம் இருந்து 85 பவுன் நகை, 1 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள், ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், விலை உயர்ந்த 7 பட்டுப்புடவைகள், ரூ.56 ஆயிரம் ரொக்க பணம், மோட்டார் சைக்கிள், 2 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.