காலையில் தொழிலதிபர்.. மாலையில் வருங்கால எம்.பி.. அதிமுகவில் சேர்ந்து உயர்ந்த புதுவை கோகுலகிருஷ்ணன்!
புதுவை: புதுச்சேரி ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக கோகுலகிருஷ்ணன் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆளும் என்.ஆர். காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுவையில் காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த கண்ணன் பதவி காலம் முடிவடைவதையடுத்து வருகிற 28-ந்தேதி எம்.பி. தேர்தல் நடைபெறுகிறது. புதுவையில் மொத்தம் 30 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில், 15 எம்.எல்.ஏ.க்கள் ஆளும் கட்சியான என்.ஆர். காங்கிரசை சேர்ந்தவர்கள். சுயேட்சை எம்.எல்.ஏ. ஒருவர் ஆளும் கட்சிக்கு ஆதரவு அளித்து வருகிறார். அ.தி.மு.க.வுக்கு 5 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
என்.ஆர்.காங்கிரசுக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் இந்த கட்சி நிறுத்தும் வேட்பாளரே வெற்றி பெற முடியும். லோக்சபா தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்ததால் இந்த ஒரு இடத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சி விரும்பியது.
ஆனால் என்.ஆர். காங்கிரஸில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. புதுவை தொழிலதிபர் கோகுலகிருஷ்ணனை தமது கட்சி வேட்பாளராக நிறுத்த முதல்வர் ரங்கசாமி விரும்பினார். ஆனால் இதற்கு அந்த கட்சியின் நேரு, கல்யாணசுந்தரம், வைத்தியநாதன், அங்காளன், கார்த்திகேயன் ஆகிய 5 எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் திடீரென இன்று அ.தி.மு.க.வுடன் முதல்வர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார். தமது கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தவிர்த்த 10 எம்.எல்.ஏக்கள், அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் 5 பேர் இணைந்து வாக்களித்தால் ராஜ்யசபா வேட்பாளர் எளிதாக வெல்வார் என்று கணக்குப் போட்டு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து வேட்புமனுத் தாக்கல் முடிவடைவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக தொழிலதிபர் கோகுலகிருஷ்ணன் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
பின்னர் அவரே புதுவை ராஜ்யசபா தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். இதன்பின்னர் அவர் உடனடியாக வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
அ.தி.மு.க. வேட்பாளர் கோகுலகிருஷ்ணனை தமது கட்சி ஆதரிக்கும் என்று புதுவை முதல்வர் ரங்கசாமியும் அறிவித்துள்ளார். இதனால் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் கோகுலகிருஷ்ணன் ஏகமனதாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
கடந்த சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரசும், அ.தி.மு.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தேர்தல் முடிந்ததுமே கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு இரு கட்சிகளும் பிரிந்து விட்டன. தற்போது ராஜ்யசபா தேர்தல் மூலம் மீண்டும் இரு கட்சிகளிடையே கூட்டணி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.