நாராயணசாமிக்கு பெரும் சிக்கல்... 3 எம்.எல்.ஏக்களுடன் நமச்சிவாயம் அணி மாறப் போவதாக பரபரப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் நாராயணசாமி ஆட்சியைக் கலைத்துப் போட சகல ரூபங்களிலும் வேலைகள் ஜரூராக நடந்து வருகிறதாம். நமச்சிவாயத்தை வளைத்து விட்டதாகவும் அவரது தலைமையில் ஒரு குரூப் கிளம்பி பாஜகவுக்குப் போகப் போவதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.
காங்கிரஸ் பக்கம் இருந்து நான்கு எம்.எல்.ஏக்களை வளைப்பதற்கான பேரம் நடந்து வருகிறது. இது சாத்தியமானால், நாராயணசாமி முதல்வராக நீடிக்க வாய்ப்பில்லை என்கின்றனர் புதுச்சேரி பா.ஜ.கவினர்.
புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களில் வென்றது. இதையடுத்து, தி.மு.க ஆதரவோடு மாநிலத் தலைவர் நமச்சிவாயம் முதல்வர் ஆவார் என எதிர்பார்த்திருந்த வேளையில், உள்கட்சி பூசலைக் கட்டுப்படுத்த நாராயணசாமியை முன்னிறுத்தினார் சோனியா காந்தி.
இதற்காக நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு வென்ற ஜான்குமார், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இதற்காக 100 கோடி ரூபாய் பரிவர்த்தனை நடந்ததாகப் புகார் எழுந்தது. அனைத்தையும் தாண்டி, இடைத்தேர்தலில் வென்று அதிகாரப்பூர்வ முதல்வரானார் நாராயணசாமி.
கிரண் பேடி குடைச்சல்
இவருக்குக் குடைச்சல் கொடுப்பதற்காக கிரண்பேடியை துணை நிலை ஆளுநராக நியமித்தது மத்திய அரசு. மாநில அரசின் ஊழல்களை அதிரடி நடவடிக்கைகளால் அம்பலப்படுத்தி வந்தார் பேடி. இதனால் கொதித்துப் போன முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரியை விட்டு கிரண்பேடி ஓடட்டும் என அதிர வைத்தார். அண்மையில், பா.ஜ.கவைச் சேர்ந்த மூன்று பேருக்கு நியமன எம்.எல்.ஏ பதவியை அளித்து கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தினார் கிரண் பேடி. இந்நிலையில், காங்கிரஸ் மேலிடத்துக்கு அதிர்ச்சியூட்டும் வகையில், ஆட்சிக் கலைப்புக்கு பா.ஜ.க திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புகார் மேல் புகார்
இதுகுறித்து நம்மிடம் பேசிய புதுச்சேரி மாநில பா.ஜ.க பிரமுகர் ஒருவர், நாராயணசாமியின் செயல்பாடுகள் குறித்து குடியரசுத் தலைவருக்குத் தொடர்ந்து புகார் அனுப்பி வருகிறார் கிரண் பேடி. அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அமைச்சர்கள் செய்யும் ஊழல்கள் குறித்தும் விரிவான அறிக்கை கொடுத்து வந்தார். இதன்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கண்டுக்காத அமைச்சர்கள்
துணைநிலை ஆளுநரை ஒரு பொருட்டாகவே அமைச்சர்கள் கருதுவதில்லை. ராகுல்காந்தியின் நன்மதிப்பைப் பெற்றிருப்பதால், அனைத்து பதவிகளும் நாராயணசாமிக்கே வந்து சேர்கிறது. இதனை காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் விரும்பவில்லை. அவர்களது அதிருப்தியை எங்களுக்கு சாதகமாக்குவதற்கான வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறோம்
நமச்சிவாயத்திற்கு வலை
புதுவையில் ஆட்சி அமைப்பதற்கு 16 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தால் போதும். பா.ஜ.க ஆதரவு கட்சிகளான என்.ஆர். காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.கவுக்கு 12 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். நமச்சிவாயம் தலைமையில் நான்கு எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.கவில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே, நாராயணசாமி முதல்வராக நீடிப்பது சிரமம். விரைவில் புதுவையில் ஆட்சி மாற்றம் நடக்க இருக்கிறது" என்றார் உறுதியாக.
கவிழாவாரா நாராயணசாமி
காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் நாராயணசாமிக்குப் பக்கபலமாக உள்ளனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். இவர்கள் எந்தச் சூழலிலும் பா.ஜ.க பக்கம் போவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஓர் இடத்தில்கூட வெற்றி பெற முடியாத கோபத்தில், ஆட்சியைக் கலைக்கும் வேலைகளில் ஆர்வம் காட்டுகிறது பா.ஜ.க. இதனை எளிதாகவே முறியடிப்போம் என்கின்றனர் காங்கிரஸ் தரப்பில்.