மவுலிவாக்கம் கட்டிட விபத்து: 150 அடி சுற்றளவில் வசிப்பவர்கள் காலி செய்ய உத்தரவு
சென்னை: மவுலிவாக்கம் கட்டிட விபத்து நடந்த இடத்திலிருந்து 150 அடி சுற்றளவில் வசிப்பவர்கள் உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கருதி பொதுப்பணித் துறை விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
போரூர் அருகே உள்ள மவுலிவாக்கத்தில் கடந்த 28-ம் தேதி 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 61 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து பொதுப்பணித் துறை பொறியாளர்கள் குழு விரிவாக ஆய்வு நடத்தி, அறிக்கையை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அளித்துள்ளது.

அபாயகரமான பகுதி
மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தபோது, அதன் பின்பக்கம் உள்ள 3 வீடுகளும் நொறுங்கியுள்ளன.
தற்போது பாதுகாப்பற்ற நிலையில் உள்ள மற்றொரு 11 மாடி கட்டிடமும் எந்த நேரத்திலும் இடிந்துவிழும் நிலையில்தான் உள்ளது. எனவே, அந்த அடுக்குமாடி குடியிருப்பு குடியிருக்க லாயக்கற்றது எனக்கூறி "சீல்" வைக்கப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தின் அருகே யாரும் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

காலி செய்ய உத்தரவு
பாதுகாப்பற்ற அந்த கட்டிடத்தின் பின்பக்கமும் வீடுகள் உள்ளன. மொத்தத்தில் இடிந்து விழுந்த கட்டிடம் மற்றும் அதனருகில் உள்ள மற்றொரு 11 மாடி கட்டிடத்தைச் சுற்றி 150 அடி தூரத்தில் உள்ள வீடுகளில் இருப்பவர்கள் உடனடியாக காலி செய்ய வேண்டும் என்றும், அந்த இடத்தை முழுமையாக ஆய்வு செய்து பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை யாரும் அந்தப் பகுதியில் வசிக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நிவாரணம் என்ன?
தமிழக பொதுப்பணித் துறை எச்சரித்துள்ளதால், அங்கே வசிப்பவர்கள் தற்காலிகமாக வேறு இடத்துக்கு இடம்பெயர்ந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு இடம்பெயரும்போது வீட்டு வாடகை, முன்பணம் உள்ளிட்ட செலவுகள் ஏற்படும்.

அரசு நிவாரணத் தொகை
எனவே இவர்களை, இந்த விபத்தில் மறைமுகமாக பாதிக்கப்பட்டவர்களாகக் கருதி தமிழக அரசுதான் நிவாரணம் வழங்க வேண்டும். கட்டிட விபத்து நடந்த இடத்தைச் சுற்றி எத்தனை பேர் உடனடியாக இடம்பெயர்ந்து செல்ல வேண்டியுள்ளது. அதற்கான செலவு ஆகியவற்றை கணக்கிட்ட பிறகு நிவாரணம் பற்றி அரசு அறிவிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications