சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் அமர்ந்து வைகோ, ஜி.ஆர் மறியல்
சென்னை: காவிரி பிரச்சனையில் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நடத்தப்படும் ரயில் மறியல் போராட்டத்தில் சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் 1000க்கும் மேற்பட்ட ம.ந.கூ தொண்டர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு துரோகம் செய்துள்ள மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களான வைகோ, ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் 1000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் ரயிலை மறிக்க சென்றனர். அவர்கள் அனைவரையும் சென்ரல் ரயில் நிலையத்திற்குள் நுழைய விடாமல் போலீசார் தடுத்துவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, வைகோ மற்றும் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர், "நாங்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த வந்திருக்கிறோம். எனவே, நீங்கள் ரயில் நிலையத்திற்குள் அனுமதித்துதான் ஆக வேண்டும்" என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, ம.ந.கூ தலைவர்கள் மற்றும் 50 தொண்டர்களை மட்டும் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் போலீசார் அனுமதித்தனர்.
பின்னர், உள்ளே சென்ற தலைவர்களும் தொண்டர்களும் மங்களூர் செல்வதற்கு தயாராக இருந்த ரயிலின் முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் வைகோ உள்ளிட்ட தலைவர்களையும் மறியலில் ஈடுபட்ட தொண்டர்களை கைது செய்ய முயற்சி செய்தனர். அப்போது குறுக்கிட்ட வைகோ அவர்களுடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
"நாங்கள் அமைதியாக போராடிவிட்டு சென்று விடுவோம். தமிழகத்தில் ரயில் மறியல் செய்து வரும் விவசாயிகள் யாரையும் வலிகட்டாயமாக எழுப்பி வெளியே அனுப்பவில்லை. அதுபோல எங்களையும் அனுப்ப வேண்டாம். நாங்கள் அமைதியாக போராட்டம் நடத்த அனுமதியுங்கள்" என்று பேசியதை அடுத்து போலீசார் அமைதியானர்.
இதற்கு பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ பேசியது:
ஏழரை கோடி மக்கள் கிளர்ந்து எழுந்துள்ள அமைதியான போராட்டம் இது. காவிரி பிரச்சனை தொடர்பாக கர்நாடகத்தில் தமிழர்கள் உடைமைகள் அடித்து நொறுக்கப்பட்டன. ஆனால் இங்கு பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும் பல்வேறு கட்சித் தொண்டர்களும் அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். எங்கள் நோக்கம் தமிழக அரசுக்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த வேண்டும் என்பது இல்லை.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். நாடாளுமன்றதில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று 9 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அரசு இப்போது சொல்லுவது திட்டமிட்ட துரோகச் செயலாகும் என்று வைகோ கூறியுள்ளார்.