'அம்மா' விடுதலைக்கு பிறகும் அசையாத அரசு இயந்திரம்.. காரணம் ஆர்.கே.நகர் தேர்தல்!
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் பணியில் மூழ்கியுள்ளதால், அமைச்சர்கள் யாரும் வருகை தராமல், தலைமைச் செயலகம், வெறிச்சோடி காணப்படுகிறது.
சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், கடந்த ஆண்டு செப்டம்பர், 27ம் தேதி, ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தார். இதையடுத்து பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை பொறுப்பேற்றது. ஆனாலும், சுறுசுறுப்பாக பணிகளில் ஈடுபடாமல், ஜெயலலிதாவுக்காக வேண்டுதல் நிறைவேற்ற வழிபாட்டு தலங்களில் சுற்றிக் கொண்டிருந்தனர் பெரும்பாலான அமைச்சர்கள்.

கடந்த மாதம், 23ம் தேதி, ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார். எனவே, மீண்டும் அமைச்சர்கள் தவறாமல், தலைமைச் செயலகம் வருவார்கள், முடங்கியிருந்த அரசு இயந்திரம் சுழலும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அ.தி.மு.க., சார்பில் அத்தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடுகிறார். தேர்தல் பொறுப்பாளர்களாக, அனைத்து அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, அனைவரும் ஆர்.கே.நகரில் முகாமிட்டு, தேர்தல் 'பணியாற்றி' வருகின்றனர். இதனால், யாரும் தலைமைச் செயலகம் வருவதில்லை. அவர்கள் வராததால் அதிகாரிகளும் சிரத்தையுடன் வேலை பார்ப்பதில்லை. பொதுமக்களும் வருவதில்லை என்பதால் தலைமைச் செயலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications