ராகு-கேது பெயர்ச்சி : திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் கோவில்களில் சிறப்பு பூஜை
கும்பகோணம்: ராகுபகவான் துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்குள் இராகுவும், மேஷ ராசியிலிருந்து மீனம் ராசிக்குள் கேதுவும் நுழைகின்றனர். திருநாகேஸ்வரத்தில் நாளை ராகு பெயர்ச்சி விழா நடக்கிறது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரத்தில் ராகுதோஷ நிவர்த்தி ஸ்தலமாக விளங்குவது நாகநாதசுவாமி கோயில். இங்கு மட்டுமே ராகுபகவான் நாகவல்லி, நாககன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாக வீற்றிருக்கிறார்.
இக்கோயிலில் ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் ராகுபெயர்ச்சி விழா சிறப்பு வாய்ந்தது.
நாளை காலை 11 மணி அளவில் ராகு துலாம் ராசியில் இருந்து கன்னிராசிக்கு பெயர்ச்சியடைகிறார். இதையடுத்து பரிகார ராசிகளுக்கு இரண்டு கட்டமாக லட்சார்ச்சனை நடக்கிறது.
லட்சார்ச்சனை
முதல்கட்ட லட்சார்ச்சனை கடந்த 17ம் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். நேற்று மாலை 6 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜை ஆரம்பித்து பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. இன்று காலை 8 மணிக்கு இரண்டாம்கால யாகசாலை பூஜை நடந்தது.
யாகசாலை பூஜை
மாலை 6 மணிக்கு மூன்றாம் காலம், நாளை (சனி) காலை 8 மணிக்கு, 4ம் கால யாகசாலை பூஜைகளும் நடக்கிறது. இதைத்தொடர்ந்து நாளை காலை 10 மணிக்கு கடம்புறப்பாடு, ராகுபகவானுக்கு மகாஅபிஷேகம், பாலாபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு மகாதீபாராதனை நடைபெறுகிறது.
ராகு பெயர்ச்சி
காலை 11 மணிக்கு ராகு பெயர்ச்சியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறும்.பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.
கேது பெயர்ச்சி
கேது பெயர்ச்சி நாகை மாவட்டம், பூம்புகார் அடுத்த கீழப்பெரும்பள்ளம் நாகநாதசாமி கோயில் கேது பரிகார தலமாக உள்ளது. இங்கு கேது பகவான் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார்.
சருமநோய்கள் குணமாகும்
கேது பகவானை வழிபட்டால் தொழில் வளர்ச்சி, திருமணத்தடை நீங்குதல், சருமநோய்கள் குணமாகும் என்பது ஐதீகம். ஞானகாரகன் என அழைக்கப்படும் கேதுபகவான் ஒன்றரை ஆண்டு காலத்திற்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிக்கிறார்.
அதன்படி நாளை(சனிக்கிழமை)காலை 11.12 மணிக்கு மேஷ ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கிறார். கேது பெயர்ச்சியை முன்னிட்டு நாகநாதர் கோயிலில் இன்று காலை விநாயகர் பூஜை செய்யப்பட்டு முதற்கால யாக பூஜைகள் துவங்கியது.
பரிகார ராசிகள்
நாளை காலை 2ம் கால யாக பூஜை செய்யப்பட்டு மகா பூர்ணாஹூதி நடக்கிறது. தொடர்ந்து கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும் தீபஆராதனையும் நடக்கிறது. பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் மேஷம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம்.
நிழல் கிரகங்கள்
ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன்(குரு), வெள்ளி(சுக்கிரன்), சனி ஆகியவை பிரதான கிரகங்கள். ராகு-கேது இரண்டும் சாயா(நிழல்) கிரகங்கள்.
புராண கதைகள்
ராகு-கேது பற்றி பல்வேறு புராணக் கதைகள் உள்ளன. அவர்கள் செய்த தவவேள்விகளால் மகிழ்ந்த பரமேஸ்வரனும், விஷ்ணுவும், நவகிரக பரிபாலனம் செய்யும் பாக்கியத்தை, அந்தஸ்தை அவர்களுக்கு அளித்தனர். ஒருவரது முன் ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை ராகு-கேது வழங்குகிறார்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
ராஜபதி ஆலயத்தில்
இதேபோல குரும்பூர்-ஏரல் சாலையில் அமைந்துள்ள கேது ஸ்தலமான ராஜபதி ஸ்ரீசெளந்திரநாயகி அம்மன் சமேத ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவிலில் ராகு கேது பெயர்ச்சி விழா 21ஆம் தேதி காலை 6மணி முதல் இரவு 9மணி வரை நடைபெறுகிறது.
பக்தர்கள் அபிஷேகம்
இதனையொட்டி சனிக்கிழமை இத்திருக்கோவிலில் நவலிங்க சன்னதியில் உள்ள ராகுவின் அதிபதி நாகநாதருக்கும் கேதுவின் அதிபதி கேதீஸ்வரருக்கும் பக்தர்கள் தாங்களாகவே அபிஷேகம் செய்து பூஜை நடத்தி வழிபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.