ஜோதிமணியின் அதிரடி மாற்றத்திற்கு பின்னணியில்... ராகுலின் கோபமா?
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கிய ஜோதிமணி, திடீரென சுயேட்சையாகப் போட்டியிடும் முடிவைக் கைவிட்டதற்குக் காரணம் ராகுலின் கோபம் தான் எனக் கூறப்படுகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது காங்கிரஸ். இந்தக் கூட்டணியில் காங்கிரஸிற்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், அதில் அரவக்குறிச்சி தொகுதி இல்லை.
எப்படியும் அத்தொகுதி தனக்குத் தான் என்ற நம்பிக்கையில் கடந்த ஒரு வருட காலமாக அப்பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார் ஜோதிமணி. ஆனால், திடீரென அத்தொகுதி திமுகவிற்கு ஒதுக்கப்பட்ட ஏமாற்றத்தை அவரால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.
சுயேட்சை முடிவு...
இதனால் அரவக்குறிச்சி தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்காவிட்டால், தான் அத்தொகுதியிலேயே சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அதிரடியாக அறிவித்தார் ஜோதிமணி. கூடவே, ராகுல் தனக்கு ஆதரவாகப் பேசியதாகவும், ஆனால் ஈவிகேஎஸ் தான் அதனை மதிக்காமல் செயல்பட்டதாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்தார் அவர்.
குஷ்புவுக்கு வாய்ப்பு...
இதற்கிடையே, ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் குஷ்புவைக் களமிறக்குவதற்கு காங்கிரஸ் சம்மதித்தால் அத்தொகுதியை விட்டுத்தர திமுக சம்மதித்ததாகவும், ஆனால் அத்தொகுதிக்கு பதில் அரவக்குறிச்சியை ராகுல் கேட்டதாகவும், அதற்கு திமுக மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
முடிவை மாற்றிய ஜோதிமணி...
இந்நிலையில், கடந்தவாரம் பேட்டியொன்றில் ஜோதிமணி சுயேட்சையாக போட்டியிட்டால், அவரைக் கட்சியில் இருந்து நீக்கப் போவதாக மிரட்டல் விடுத்தார் ஈவிகேஎஸ். அதனைத் தொடர்ந்து உடனடியாக தனது முடிவை மாற்றினார் ஜோதிமணி. அரவக்குறிச்சி தொகுதியில் தனித்துப் போட்டியில்லை என்றும், ஆனால், திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றிக்கு உழைக்கப் போவதில்லை என்றும் அதிரடியாக அவர் பின்வாங்கினார்.
ராகுல் கோபம்...
ஜோதிமணியின் இந்த திடீர் மனமாற்றத்திற்குக் காரணம், ராகுலின் கோபம் தான் என கட்சி வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, ஜோதிமணியின் செயல்பாடுகள் குறித்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், ஏற்கனவே உட்கட்சிப் பூசலுக்குப் பேர் போன காங்கிரஸில் தேர்தல் சமயத்தில் ஜோதிமணியின் இந்த நடவடிக்கை அவருக்கு கோபத்தை ஏற்படுத்தி, அவரைக் கண்டிக்குமாறு வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
தவறான பிம்பம்...
மேலும், அரவக்குறிச்சியை ஜோதிமணிக்குப் பெற்றுத்தர ராகுல் கடுமையாக போராடினார் என்ற தகவல்கூட முற்றிலும் தவறானது தானாம். ஜோதிமணியின் பேட்டிகளால் ராகுலுக்கு கட்சிக்குள் செல்வாக்கில்லை என்ற பிம்பம் மக்களிடையே ஏற்பட்டு விட்டதாக அவர் கருதுகிறாராம்.
மாநிலத்தலைவர்கள் பொறுப்பில்...
ராகுல் கேட்டிருந்தால் நிச்சயம் திமுக அத்தொகுதியை காங்கிரஸிற்கு விட்டுத் தந்திருக்கும் என்றும், ஆனால், தற்போது அவர் அஸ்ஸாம், மேற்கு வங்கத் தேர்தல் பணிகளில் பிசியாக இருப்பதால் தமிழக தேர்தலில் காங்கிரஸ் தொகுதித் தேர்வு, வேட்பாளர் தேர்வு போன்ற பணிகளை மாநிலத் தலைவர்கள் பொறுப்பிலேயே விட்டு விட்டதாக காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தான் காரணம்...
ராகுலின் உதவியாளர் ஒருவரே இது தொடர்பாக நேரடியாக ஜோதிமணியை எச்சரித்ததாகவும், அதனாலேயே அதிரடியாக அவர் தனது முடிவை மாற்றிக் கொண்டார் என்றும் கூறப்படுகிறது.