நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை தடுப்போம்... சந்தித்த விவசாயிகளிடம் ராகுல் காந்தி உறுதி
திருச்சி : மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை தடுப்போம் என்று விவசாயிகளை சந்தித்த ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருச்சியில் இன்று காமராஜர் பிறந்த நாள் விழா பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் தமிழில் வணக்கம் எனக் கூறி பேச்சை தொடங்கினார்.
தொடர்ந்து ராகுல் காந்தி பேசியதாவது..
காங்கிரஸ் கட்சியின் இந்தக் கூட்டம் மிகப்பெரிய மாநாடு போல் காட்சி அளிக்கிறது. இந்தக் கூட்டத்திற்கு நல்ல சகுனமாக மழை பெய்கிறது. மழை பெய்தாலும் தொண்டர்கள் நகராமல் இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு நல்ல பலம் உள்ளது என்பதை இந்த பொதுக்கூட்டம் நிரூபித்துள்ளது. மழை வந்தாலும், அதை பொருட்படுத்தாமல் எனது பேச்சை கேட்க வந்தவர்களை பாராட்டுகிறேன்.
தமிழகத்தில் கடன் வாங்கி மாணவர்கள் கல்வி கற்கும் நிலை உள்ளது. ஒரு இளைஞர் கல்வி பெற்றால் வளமான எதிர்காலம் அமையும். தமிழகத்தின் தலையாய பிரச்சனை வேலைவாய்ப்பின்மை. வேலைவாயப்பு மட்டுமே ஒவ்வொருவரும் முன்னேறுவதற்கான வழியாகும்.
தமிழகத்தில் மூன்றில் ஒரு இளைஞருக்கு வேலை இல்லை. வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைகிடைக்க காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்கும் என்றார்.
தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசிய பின்னர் பண்ணை வீடு ஒன்றில் விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்..
அப்போது பேசிய அவர், விவசாயிகளின் சக்தி என்னவென்று பிரதமர் மோடிக்கு தெரியவில்லை என்றும், இரண்டு, மூன்று தொழிலதிபர்களுக்காக ஆட்சி நடத்தக்கூடாது எனவும் கூறினார்.
மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை தடுப்போம் என்றும் விவசாயிகளிடம் ராகுல் காந்தி உறுதியளித்தார்.