ராகுலின் தமிழக வருகை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.. தமிழிசை சவுந்தரராஜன்
டெல்லி : காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் தமிழக வருகை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடாது என்று பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்
தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை, தமிழிசை சவுந்தரராஜன் நேற்று சந்தித்து பேசினார். பின்னர் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது..
ராகுல் காந்தி வருகை மட்டுமே தமிழகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் பல மாநிலங்களுக்கு அவர் சென்றார்.
ராகுல் காந்தி சென்ற எந்த மாநிலத்திலும் எந்த தாக்கத்தையும் அவரால் ஏற்படுத்த முடியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் ஏற்படுத்த முடியாது.
ஏனென்றால் 10 ஆண்டு காலம் மோசமான ஆட்சி நடந்துகொண்டிருக்கும்போது ராகுல்காந்தி மக்களுக்காக எத்தனை முறை நாடாளுமன்றத்தில் பேசினார் என்பதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். எவ்வளவு நாள் நாடாளுமன்றத்திற்கு வந்தார்கள் என்பதையும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
துணைத் தலைவராக இருந்து அவர் பல ஊழல்களை தடுத்திருக்கலாம். விலைவாசி ஏற்றங்களை தடுத்திருக்கலாம். மிக மோசமான திட்டங்களை தடுத்திருக்கலாம். அதையெல்லாம் ஒன்றுமே அவர் செய்யவில்லை. அதனால் ராகுல் காந்தி தமிழகம் வருகை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.