கனமழை: நெல்லை, குமரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
திருநெல்வேலி: திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் வியாழக்கிழமை உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையின் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று மாலை முதல் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடியில் விடிய விடிய கனமழை கொட்டியது. இதன் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை, குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாவட்டங்களில் உள்ள அணைகள் மளமளவென நிரம்பி வருகின்றன.
இதேபோல, ராமநாதபுரம், ராமேஸ்வரம், திருச்செந்தூர், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது.
காற்றழுத்தத் தாழ்வு நிலை தெற்கு வங்கக் கடலில் இந்தியப் பெருங்கடலுக்கு அருகில் உருவாகியுள்ளதால் தமிழகத்துக்கு இந்தக் காற்றழுத்தத் தாழ்வு நிலையின் காரணமாக கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம், புதுவையின் சில இடங்களில் மழையோ இன்று இடியுடன் கூடிய மழையோ பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பல்கலை
தேர்வுகள் ரத்து
கனமழையால் நெல்லை மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கண்ணையன் தெரிவித்துள்ளார். ரத்து செய்யப்பட்ட தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.