”மழை தரும் பங்குனி மாத மாரியம்மன் திருவிழா”
சென்னை: ஒவ்வொரு தமிழ் வருடங்களிலும் ஆடி மாதம்தான் அம்மனுக்கு உகந்ததாக கருதப்படுகிறது.அம்மாதத்தில் அம்மனுக்கு கூழ் ஊற்றுதல், தீ மிதித்தல் போன்ற நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படும்.
பூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம் ஆடி. பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார். சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
ஆனால்,ஆடி மாதம் மட்டும் அம்மனுக்கு உகந்ததல்ல.பங்குனி,சித்திரை மாதங்களும் அம்மனுக்கு உகந்தவை தான்.கொளுத்தும் கோடை காலம் பிறக்கும் பங்குனி,சித்திரையில் அம்மன் மனதை குளிர்வித்து மழை வேண்டி திருவிழாக்கள் கொண்டாடுகிறார்கள் பல்வேறு கிராம மக்கள்.
"மாரியம்மன்" மழை பொழிய வைக்கும் காவல் தெய்வமான அம்மன் அம்சம் என்பதால் இவளுக்கு இந்த பெயர். செட்டிநாடு பகுதிகளில் பல விதமான மாரியம்மன்கள் அருள் பாலித்து வருகின்றனர்.
இத்தகைய அம்மன்களின் மனம் குளிர்வடைந்து கோடை வெய்யிலின் கொடுமை தணிந்து அம்மை, கொப்புளங்களால் மக்கள் அவதிப்படக்கூடாது என்று பால்குடம், குழந்தைகள் நலனுக்காக கரும்புத்தொட்டில் போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்தி வழிபடுகின்றனர்.