சென்னையில் விடாமல் பொளந்து கட்டும் மழை.. சீக்கிரமே வீடு திரும்ப தயாராகும் மக்கள்!
சென்னையில் விடாமல் மழை பெய்து வருவதால் இரவு பணி முடித்துவிட்டு வீடு திரும்புவது குறித்து வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர்.
சென்னை: சென்னையில் விடாமல் காலை முதல் ஆங்காங்கே கனமழை கொட்டி வருவதால் அச்சம் கொண்ட வாகன ஓட்டிகள் இரவு பணி முடித்து எப்படி வீடு திரும்பவது என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
வளி மண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று அதிகாலை முதல் சென்னையில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் காலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் பள்ளி, கல்லூரி செல்வோர், பணிக்கு செல்வோர், இதர வேலை நிமித்தமாக செல்வோர் என கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறித்த இடத்துக்கு செல்ல வழக்கத்தை விட 2 அல்லது 3 மடங்கு நேரம் பிடித்ததாக கூறுகின்றனர்.
இந்நிலையில் மழை விடாமல் வாட்டி வதைத்து வருவதால் காலையில் இதுவரை படாத அளவுக்கு அவதிப்பட்ட வாகன ஓட்டிகள் இரவு வீடு திரும்பும்போது இன்னும் போக்குவரத்து நெரிசல் இருக்குமே, எவ்வாறு வீடு திரும்புவது என்று அச்சத்தில் உள்ளனர்.
சென்னையில் மழை விட்டு விட்டு கொட்டி வருவதால் எண்ணூர் துறைமுகத்தில் 2 எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.