அரசுக்கு இப்படியொரு ஊர் இருப்பதாவது தெரியுமா... சபிக்கப்பட்ட கடலூர்... இந்த வருடமும் பாதிப்பு
ஒவ்வொரு வருடமும் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் கடலூர், தற்போது மழையால் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video

கடலூர்: தமிழகம் கடந்த சில வருடங்களாக கடுமையான இயற்கை பேரிடர்களால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வருடமும் தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு வகையில் இயற்கை பேரிடர் ஏற்பட்டு விடுகிறது.
இந்த பேரிடர் காலங்களில் தமிழ்நாட்டில் அதிகம் பாதிக்கப்படும் இரண்டு பகுதிகள் சென்னையும், கடலூரும். சென்னை அனைத்து பேரிடர்களிலும் மக்களின் உதவியால் மீண்டும் வந்துவிடுகிறது. ஆனால் கடலூர் ஒவ்வொரு வருடமும் மிகவும் மோசமாக பாதித்து அதில் இருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறது.
இதோ இப்போது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை அதிகரித்து இருக்கும் இந்த சூழ்நிலையில் மீண்டும் கடலூரில் கனமழை பெய்ய ஆரம்பித்து இருக்கிறது. இப்போதே அங்கு மழையால் சில பகுதிகள் பாதிக்க ஆரம்பித்துவிட்டன.

கடலூர் ஒரு சபிக்கப்பட்ட பூமி
வடகிழக்கு பருவமழை ஒவ்வொரு முறை மாறுபடும் சமயங்களிலும், பசுபிக் கடலில் எல் நினோ பாதிப்பு உண்டாகும் போதும், வங்கக் கடலிலும் காற்றழுத்த தாழ்வுநிலை உண்டாகும் போதும் பாதிக்கப்படும் முதல் இடம் கடலூராகத்தான் இருக்கும். ஒவ்வொரு வருடமும் கடலூர் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டு மொத்த இயல்பு வாழக்கையும் நொடிந்து போய் விடுகிறது. வருடம் முழுக்க அவர்கள் சேர்த்து வைத்த சொத்துக்களை எல்லாம் ஒரு மழைக்கும், ஒரு புயலுக்கும் பறி கொடுத்துவிட்டு மீண்டும் வாழ்க்கையை முதலில் இருந்து ஆரம்பிப்பதே வழக்கமா ஆகிவிட்டது கடலூர் மக்களுக்கு.

கடலூரை பாதித்த சுனாமி
2004 டிசம்பர் மாதம் 26ஆம் தேதி சுனாமி வந்தது. இலங்கை, இந்தியா, இந்தோனீசியா என பல நாடுகள் இதில் பாதிப்பு அடைந்தது. கடலூர் மாவட்டமும் இந்த சுனாமியில் மோசமாக பாதிப்பு அடைந்தது. கடலூர் மாவட்டத்தில் முக்கிய பகுதிகளான எம்.ஜி.ஆர்.திட்டு, பில்லுமேடு, தாழங்குடா, சோனாங்குப்பம், தேவனாம்பட்டினம், சொத்திக்குப்பம், அக்கரைக்கோரி, அகத்திய கிராமக்கள் அனைத்து சின்னாபின்னமாக மாறியது. ஒரே நாளில் அந்த மீனவ கிராமங்களில் வசித்த மக்களின் கனவுகளை சுனாமி காவு வாங்கியது. ஒரே நொடியில் கடல் 100 க்கும் அதிகமானோரை உள்ளே இழுத்து சென்றது. 600 க்கும் அதிகமானோர் இந்த சுனாமியால் மரணம் அடைந்தனர்.

கடலூரில் தானே புயல்
2011 டிசம்பர் 27ல் கடலூர் மாவட்டத்தில் தானே புயல் வீசியது. சென்னைக்கும் , கடலூருக்கும் இடையில் இருந்து கடல் பகுதியை வேகமாக கடத்த இந்த தானே புயல் 120 கிமீ வேகம் வரை சென்றது. கடலூரில் பெரும்பாலான பகுதிகளை பாதித்த இந்த புயல் சுனாமியை விட அதிகம் பாதித்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே சுனாமி பாதிப்புக்கே அங்கு சரியான நிவாரணம் வழங்கி முடிக்கப்படாத நிலையில் தானேவும் அவர்களை போட்டு நசுக்கியது. இதனால் 31 பெற அங்கு மரணம் அடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

கடலூரில் வந்த வெள்ளம்
கடலூரை மிகவும் அதிகமாக பாதித்த தானே புயலில் இருந்து திணறி மேலே வருவதற்குள் கடலூர் மக்களை தாக்கியது வெள்ளம். 2015 ஆம் ஆண்டு நவம்பர் 8ல் ஆரம்பித்த மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு டிசம்பர் 15 வரை அங்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. ஒருமாதமாகவே நூற்றுக்கணக்கான கிராம மக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர். பல லட்சம் ஏக்கர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தால் 2 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் நாசமாகியது. குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், வடலூர், குள்ளஞ்சாவடி, சேத்தியாத்தோப்பு, பரங்கிப்பேட்டை, ஸ்ரீமுஷ்ணம் பகுதிகள் மோசமாக சேதமடைந்தது.

கடலூரில் கனமழை
இந்த நிலையில் கடலூரில் தற்போதும் மழை பெய்து வருகின்றது. நேற்று ஆரம்பித்த மழை பெரிதாகி தற்போது மோசமாக பெய்து வருகிறது. கடலூரில் இருக்கும் 3 ஆயிரம் குளங்களும், 210க்கும் அதிகமான ஏரிகளில் தற்போதே முழுவதுமாக நிரம்பிவிட்டது. ஏற்கனவே வயல்களில் நீர் நிரம்பி விட்டதால் இன்னும் மழை பெய்தால் பயிர்கள் மூழ்கிவிடும் நிலை உருவாக்கியுள்ளது. இந்த மழை காரணமாக பலர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

மாற்றான் தாய் பிள்ளையா கடலூர்
தனுஷ்கோடிக்கு பின் தமிழ்நாட்டில் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரே இடம் கடலூர் மட்டும்தான் என்று கூறினால் மிகை ஆகாது. ஒவ்வொரு வருடமும் சென்னை ஏதாவது ஒரு வகையில் பாதிக்கும் பொது அங்கு சரியான அளவில் நிவாரண பணிகள் செய்யப்பட்டு விடுகின்றன. அரசு செய்யத்தவறும் போது கூட மக்கள் கூட்டாக இணைந்து நிவாரணத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால் கடலூர் எப்போதும் பாதிக்கும் போது கடைசியாகத்தான் கவனிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வெள்ளம் வந்த போது பல வட இந்திய மாநிலங்கள் நம்மை எப்படி கண்டுகொள்ளாமல் இருந்தார்களோ அப்படித்தான் தமிழ்நாட்டிற்குள் கடலூர் கண்டுகொள்ளாபடாமல் இருக்கிறது.












Click it and Unblock the Notifications