ஒரே வாரத்தில் கொட்டித் தீர்த்த ஒரு மாத மழை - கலக்கத்தில் கடலூர் விவசாயிகள்!
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் ஒரு மாதத்தில் பெய்யவேண்டிய மழை கடந்த 10 நாட்களில் கொட்டி தீர்த்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழைக்கு முன்னர் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இது விவசாயத்திற்கு போதுமானதாக இல்லாததால் கல்லணையிலிருந்து முறை வைத்து தண்ணீர் வழங்கப்படும் நிலை ஏற்பட்டது. இதனால் கடலுார் மாவட்ட டெல்டா விவசாயிகள் வடகிழக்கு பருவ மழை கைகொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் நேரடி நெல்விதைப்பு மற்றும் நடவுப் பணிகளை மேற்கொண்டனர்.
கடந்த அக்டோபர் மாதம் பெய்ய வேண்டிய சராசரி மழையில் 50 சதவீதமே பெய்ததால், விவசாயிகள் கவலையடைந்தனர்.இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலைக் காரணமாக மாவட்டத்தில் கடந்த 8 ஆம் தேதி நள்ளிரவு முதல் நேற்று முன்தினம் இரவு வரை கனமழை கொட்டி தீர்த்தது.
மாவட்டத்தில் நவம்பர் மாதத்தில் சராசரியாக 396.5 மி.மீட்டர் மழை பெய்யவேண்டும். கடந்த பத்து நாட்களில் நேற்று காலை வரை 342.72 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் மாதம் முழுவதும் பெய்ய வேண்டிய மழை, 10 நாளில் கொட்டித் தீர்த்ததால் மாவட்டமே வெள்ளக் காடாக மாறி, விளை நிலங்கள் மூழ்கியதாலும், தண்ணீர் வீணாக கடலில் சென்று கலப்பதாலும் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.