மாயமான இளம்பெண்கள்: அதிமுக கவுன்சிலர் கொலைக்குக் காரணமா?
ராஜபாளையம்: ராஜபாளையம் அதிமுக கவுன்சிலர் படுகொலை செய்யப்பட்டதற்கு அவருடைய தொழிற்சாலையில் பணிபுரிந்த இளம் பெண்கள் சிலர் காணாமல் போனதே காரணம் என்று கூறப்படுவதால் பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.
சூளை பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்த பா.மீனாட்சிசுந்தரம், ராஜபாளையம் 17-வது வார்டு கவுன்சிலராக தொடர்ந்து 3-வது முறையாகப் பொறுப்பு வகித்து வந்தார்.
எம்.ஜி.ஆர். இளைஞரணி நகரச் செயலராகவும் பொறுப்பு வகித்துவந்த இவர், பேரீச்சம்பழம் மொத்த வியாபாரமும் செய்து வந்ததோடு, ரியல் எஸ்டேட், கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டதுடன், கட்டப் பஞ்சாயத்துகளிலும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வீட்டிலிருந்து புறப்பட்டு பஞ்சுமில் சாலையிலுள்ள தனது அலுவலகத்துக்கு வந்தபோது மர்ம நபர்களால் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
விசி கட்சியினர் கைது
இதுதொடர்பாக ராஜபாளையம் வடக்கு போலீஸார் இளஞ்சிறுத்தை கள் எழுச்சிப் பேரவை மாவட்டத் துணைச் செயலர் பு.சீனி என்ற சீனிவாசன், விடுதலை சிறுத்தைகள் ஒன்றியச் செயலர் பொ.நாதன், இளஞ்சிறுத்தைகள் ஒன்றியச் செயலர் மா. பொ.கிடாரி என்ற நீராஜலிங்கம், விடுதலைச் சிறுத்தைகள் நகர துணைச் செயலர் வே.ரமேஷ் ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.
ஆயுதங்கள் பறிமுதல்
மேலும், தாட்கோ காலனியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் தொண்டரணி மாவட்டச்செயலர் தாமஸ் (எ) தமிழ்வளவன் என்பவரைத் தேடி வருகின்றனர். கொலையாளிகள் பயன்படுத்திய ஆயுதங்களும் வாகனமும் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பார் தகராறு
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: கொலை வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சீனிவாசனுக்கு கவுன்சிலர் மீனாட்சி சுந்தரம் கடந்த ஆண்டு பார் ஏலம் எடுத்துக் கொடுத்துள்ளார். தற்போது அந்த பாரை மற்றொருவருக்கு கொடுப்பதற்காக முயன்றபோது, அதை சீனி உள்ளிட்டோர் கண்டித்துள்ளனர்.
வழக்குப் பதிவு
ஆனால் கவுன்சிலர் மீனாட்சிசுந்தரம் அதை ஏற்கவில்லை. இதன் காரணமாகவே கவுன்சிலர் மீனாட்சிசுந்தரம் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவித்தனர். இக்காரணத்தின் அடிப்படையிலேயே வழக்குப் பதிவும் செய்துள்ளனர்.
பெண்கள் பிரச்சினை
ஆனால், கொலை செய்யப்பட்ட கவுன்சிலர் மீனாட்சிசுந்தரத்திடம் உதவிகள் கேட்டு வந்த சில பெண்களை அவர் நடத்தியவிதம் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சிலருடன் மோதல் நடந்து வந்ததாகவும், இதில் ஒரு பெண் விவகாரத்தில், தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள சீனி என்ற சீனிவாசனுடனும் கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த சிலர் தற்போது பேசி வருகிறார்கள்.
மாயமான இளம்பெண்கள்
இதுமட்டுமின்றி, கொலை செய்யப்பட்ட கவுன்சிலர் மீனாட்சி சுந்தரம் நடத்தி வந்த பேரீச்சம்பழம் குடோனில், இளம்பெண்கள் பலர் வேலைபார்த்து வந்துள்ளனர். அவர்களில் சிலர் அடுத்தடுத்து காணாமல் போனதாகவும், அதில் ஒரு பெண் சமீபத்தில் மும்பையில் இருப்பது தெரிய வந்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்ததாகவும், இதுபற்றி தட்டிக் கேட்டபோது மீனாட்சிசுந்தரத்துக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர்களுக்கும் பகை முற்றியதாகவும் கூறப்படுகிறது.
முக்கிய பிரமுகர்கள் தொடர்பு
ஆனால், பெண்கள் விவகாரத்தில் மீனாட்சிசுந்தரத்துக்கு ஆதரவாக செயல்பட்ட சில முக்கிய அரசியல் பிரமுகர்களின் தலையீடு காரணமாகவே, பார் நடத்துவதில் ஏற்பட்ட பிரச்சினையை மட்டும் மையமாக வைத்து வழக்கு பதிவு செய்யும் நிர்பந்தம் போலீஸாருக்கு ஏற்பட்டதாகவும் பேசப்படுகிறது.
அரசியல் குறுக்கீடு
இதுகுறித்து, மாவட்ட எஸ்.பி. மகேஸ்வரன் கூறியதாவது: பார் நடத்துவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே கொலை நடந்துள்ளது என்றுதான் தகவல் உள்ளது. பெண்கள் விவகாரத்தில், கொலை செய்யப்பட்ட கவுன்சிலர் மீனாட்சிசுந்தரத்துக்குத் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக யாரும் எந்தப் புகாரும் அளிக்கவில்லை. போலீஸ் விசாரணையில் எந்த அரசியல் குறுக்கீடுகளும் இல்லை என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications