தமிழகத்தில் முதல் முறையாக சிறைக் கைதிகள் வாக்களிக்க ஏற்பாடு: ராஜேஷ் லக்கானி
சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கு நடைபெற உள்ள தேர்தலில் முதல் முறையாக சிறைக் கைதிகளும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
சென்னை மீனாட்சி கல்லூரியில் நேற்று தேர்தல் விழிப்புணர்வு பிரசார கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய ராஜேஷ் லக்கானி, தேர்தலில் வாக்களிப்பது நமது ஜனநாயகக் கடமை. தமிழக சட்டசபைக்கு மே 16-ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.
அன்றைய தினம் முதல் பணியாக நீங்கள் ஓட்டுப்போட செல்ல வேண்டும். அதன்பிறகு மற்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் முயற்சித்து வருகிறது.
அதன்படி தமிழகத்தில் மொத்தம் உள்ள 65,616 வாக்குச் சாவடிகளில், 10 சதவித வாக்குச் சாவடிகள் அதாவது 6500 வாக்குச் சாவடிகளில் தேர்தல் விழிப்புணர்வு குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சிறைக் கைதிகள் வாக்களிக்க சட்டத்தில் இடம் இருப்பதால் அவர்களும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம், சிறைக் கைதிகள் தபால் மூலம் தங்கள் வாக்கைப் பதிவு செய்ய முடியும். இதன் மூலம் தமிழக சிறைகளில் இருக்கும் 13 ஆயிரம் பேர் வாக்களிக்க முடியும் என்று தெரிவித்தார்.