2.0, காலாவிற்குப் பிறகு ஆண்டவன் என்ன சொல்கிறானோ பார்ப்போம்... ரஜினி என்ன இப்படி சொல்லிட்டாரு!
2.0 மற்றும் காலா திரைப்படத்திற்குப் பிறகு ஆண்டவன் என்ன சொல்கிறானோ அதை பொருத்திருந்து பார்ப்போம் என்று நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
Recommended Video
சென்னை : சங்கரின் இயக்கத்தில் உருவாகியுள்ள 2.0 திரைப்படம், காலா பட ரிலீசிற்குப் பிறகு ஆண்டவன் என்ன சொல்கிறானோ அதை பொருத்திருந்து பார்ப்போம் என்று நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் பேசியுள்ளார்.
சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று 5வது நாளாக ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். காலையில் ராகவேந்திரா மண்டகம் வந்த அவர் ரசிகர்கள் மத்தியில் உற்சாகமான தொடக்க உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது : 1960களில் கர்நாடகாவில் மத்ராஸ் பற்றி பெருமையாக பேசுவார்கள். அப்போதெல்லாம் மதராஸ் தான். போலீஸ், வக்கீல், கல்லூரி, போக்குவரத்து, அரசு என்று எதுவாக இருந்தாலும் மதராஸ் போல இருக்க வேண்டும் என்று கர்நாடகாவில் பேசுவார்கள். இப்போது நாம் எப்படி சிங்கப்பூரை பார்த்து பிரமிக்கிறோமோ அப்படி இருந்தது.
1973ல் இங்கு வந்தேன், என்னுடைய குடும்பம் நடுத்தர வர்க்கத்தை விட குறைவான குடும்பம். என்னுடைய அண்ணன் 14 வயதிலேயே வேலைக்குப் போனார். அவருக்கு 5 குழந்தைகள், கார்ப்பரேஷன் மேஸ்திரியாக இருந்த அவர் 70 ரூபாய் சம்பளத்தில் பாதி என்னுடைய படிப்பிற்காக தந்தார். என் அண்ணா தான் என்னுடைய தெய்வம்.
பிலிம் இன்ஸ்டியூட்டில் படிப்தற்காக மாதம் ரூ. 35 அனுப்பி, என்னை வாயை கட்டி வயிற்றை கட்டி நடிகனாக ஆக்க கஷ்டப்பட்டார். எனக்குள் நடிப்பு திறமை இருப்பதை முதன்முதலில் கண்டுபிடித்தது நண்பன் ராஜ்பகதூர்.
ராஜ்பகதூர் நடிகனாக ஆக ஆசை, நாடகங்களுக்கெல்லாம் என்னை அழைத்து செல்வார். அதன் பிறகு சென்னையில் முரளி மனோகர் வீட்டில் இருந்து நடிப்பை தொடங்கினேன், அவர்கள் என்னை குடும்பத்தில் ஒருவராக பார்த்துக் கொண்டனர்.
பாலச்சந்தர் என்னை நடித்து காட்டச் சொன்ன போது எனக்கு தமிழும் தெரியாது, ஆங்கிலமும் தெரியாது என்று சொன்னேன். கன்னடத்தில் நடித்து காட்டினேன், பின்னர் 3 நிமிடங்கள் மவுனமாக இருந்த பாலச்சந்தர் என்னை 3 படத்தில் நடிக்க வைப்பதாக சொன்னார்.
முதலில் அபூர்வ ராகங்கள், பின்னர் வில்லனாக மூன்று முடிச்சு படத்தில் என்றார். தமிழ் மட்டும் கற்றுக்கொள் உன்னை எங்கே உட்கார வைக்கிறேன் பார் என்று பாலச்சந்தர் சொன்னார். கே. பாலச்சந்தர் என்னை தத்தெடுத்த பிள்ளையாகவே வளர்த்தார் சினிமாத்துறையில் நுழைய விட்டார்.
அதன் பிறகு பஞ்சு அருணாச்சலம், முத்துராமன், வாசு என்று இவர்கள் அனைவரும் என்னை ஸ்டாராக்கினார்கள். சுரேஷ் கிருஷ்ணா, மணிரத்னம் என்னை சூப்பர் ஸ்டாராக்கினார்கள். அதன் பின்னர் சங்கர் இந்தியாவிலேயே ஸ்டாராக்கும் படத்தை தந்தார்.
இவர்கள் எல்லாம் என்னுடைய படத்திற்கு அதிக செலவு செய்ததற்கு ரசிகர்கள் தான் காரணம். ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை நம்பி தான் இயக்குனர்கள் என்னை உருவாக்கினார்கள்
2.0 மாதிரி இனி ஒரு படம் வருமா என்பது போல இந்தப் படம் இருக்கும். வரலாற்றில் சந்திரலேகா போல இந்தப்படம் இருக்கும். 2.0வின் இறுதிக் கட்டப் பணிகள் தாமதமாவதால் ஜனவரி 26ல் இருந்து ஏப்ரல் மாதத்திற்கு ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. அதன் பிறகு காலா திரைப்படம் ரிலீசாகிறது, காலாவில் வித்தியாசமான ரஜினியை ரஞ்சித் அறிமுகம் செய்துள்ளார். எனக்கே அந்தப் படம் மிகவும் பிடித்திருந்தது. 2.0, காலாவிற்குப் பிறகு என்ன என்று ஆண்டவன் கையில் தான் இருக்கிறது என்று ரஜினி தெரிவித்துள்ளார்.