நீங்க என்ன எம்ஜிஆரா இல்லை ஜெயலலிதாவா.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ரஜினி கேள்வி!
கருணாநிதிக்கு இறுதி சடங்கு செய்த போது முதல்வரும், அமைச்சர்களும் மெரினாவில் இருந்திருக்க வேண்டாமா என்று ரஜினி கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
சென்னை: கருணாநிதிக்கு இறுதி சடங்கு செய்த போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் அமைச்சர்களும் மெரினாவில் இருந்திருக்க வேண்டாமா. அவர்கள் என்ன எம்ஜிஆரா இல்லை ஜெயலலிதா என்று ரஜினிகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி உடல்நல குறைபாடுகளால் காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மரணமடைந்தார்.அவரது இழப்பால் தமிழகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
இந்நிலையில் அவரது இறப்புக்கு தமிழ்த் திரையுலகம் இன்று இரங்கல் கூட்டம் நடத்தியது. காமராஜர் அரங்கில் நடந்த விழாவுக்கு ஸ்டாலின், ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் வந்தனர்.
அடையாளம்
அப்போது ரஜினிகாந்த் பேசுகையில் தமிழகம் மிகப் பெரிய அடையாளத்தை இழந்து விட்டது. இனி யாரைப் பார்க்க தேசியத் தலைவர்கள் தமிழர்கள் வருவார்கள். அவரது சொல்லாலும் எழுத்தாலும் பாமரர் முதல் பண்டிதர் வரை கொண்டு போய் சேர்த்தவர் கருணாநிதி.
ராஜாஜி அரங்கம்
கருணாநிதி மறைந்தார் என்று தெரிந்தவுடன் என்னால் அதை தாங்க முடியவில்லை. அவருடன் நான் நேரத்தை செலவிட்டதை பழைய நினைவுகளை நினைத்து பார்த்தேன். கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த கோபாலபுரத்துக்கு சென்றேன். அங்கு கூட்டம் இருந்ததால் என்னால் அஞ்சலி செலுத்த முடியவில்லை. இதனால் மறுநாள் காலை ராஜாஜி அரங்கத்துக்கு சென்றேன்.
உடன்பிறப்புகள்
ஸ்டாலினுக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு திரும்பி பார்த்தால் சில ஆயிரம் கூட்டம் மட்டுமே இருந்தது. இதனால் எனது மனம் வேதனை அடைந்தது. இவ்ளோ பெரிய தலைவருக்கு இவ்ளோதானா கூட்டம். எங்கே அவரது உடன்பிறப்புகள். மூச்சுக்கு முன்னூறு முறை அழைத்த உடன்பிறப்புகள் எங்கே என்று தேடினேன்.
ஈர நெஞ்சம்
இதனால் வருத்தமடைந்து தமிழக மக்கள் மீது எனக்கு கோபம் வந்தது. இதையடுத்து யூடியூப்பில் அவர் குறித்த வீடியோக்களை பார்த்தேன். அதன் பிறகு மெரினாவில் கட்டுக்கடங்காத கூட்டம் என்று செய்திகள் கூறின. இதை பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தேன். தமிழர்களின் நெஞ்சம் ஈர நெஞ்சம் அவருக்காக ஒரு சொட்டு கண்ணீர் விட்டாலும் அங்கு ஆயிரம் கண்ணீர் விடுவார்கள்.
முப்படை மரியாதை
ராகுல் காந்தி கஷ்டப்பட்டு கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்ததை பார்த்த போது எனக்கு கண்ணீரே வந்துவிட்டது. கருணாநிதியின் இறுதி சடங்கில் ஒட்டுமொத்த இந்தியாவே வந்தது. முப்படை வீரர்கள் மரியாதை கொடுத்து 21 குண்டுகள் முழங்க அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முதல்வர் எங்கே
இதில் ஒரே ஒரு குறைதான் இருந்தது. கருணாநிதியின் இறுதி சடங்கின்போது தமிழக ஆளுநர் முதல் பிற மாநிலத்து முதல்வர்கள் வரை, காங்கிரஸ் தலைவர் உள்ளிட்டோர் அங்கே நெடுநேரமாக காத்திருந்த போது அங்கே தமிழகத்தின் முதல் பிரஜை, முதலமைச்சர் வர வேண்டாமா.
எதிர்க்கட்சிகள்
மொத்த மந்திரி சபையே அங்க இருக்க வேண்டாமா. இதை மற்ற மாநிலத்து தலைவர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள். நீங்கள் எல்லாம் என்ன எம்ஜிஆரா , ஜெயலலிதாவா. எதிரிகள் லிஸ்ட் எல்லாம் போய்விட்டது. ஜாம்பவான்கள் எல்லாம் அப்போது மோதினார்கள். இப்போது வேண்டாம் சரியா. எதிர்க்கட்சிகள் அவ்வளவுதான் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
கவலைக் கொள்ள வேண்டாம்
இடம் கிடைத்ததும் ஸ்டாலின் குழந்தை மாதிரி கண்ணீர் விட்டது என்னால் தாங்க முடியவில்லை. உங்களுக்கு ஆண்டவனும், அப்பாவும், உடன்பிறப்புகள் இருக்கிறார்கள் என்பதால் கவலைப்பட வேண்டாம் என கூறிக்கொள்கிறேன் என்றார் ரஜினிகாந்த்.