மீண்டும் ரசிகர்களைச் சந்திக்கிறார் ரஜினிகாந்த்... அரசியல் பிரவேச அறிவிப்பு வருமோ?
ரசிகர்களை வரும் அக்டோபர் மாதம் மீண்டும் ரஜினிகாந்த் சந்திக்கவுள்லதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: காலா படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் வரும் அக்டோபர் மாதம் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை மீண்டும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மே மாதம் 15 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது அவர் அரசியல் குறித்து பேசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.
அவரது பேச்சு மூலம் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்று அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தங்களை எப்போது சந்திப்பார் என்று மற்ற மாவட்ட ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருந்தனர்.
தற்போது காலா படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதன் அவசியம் குறித்து திருச்சியில் வரும் 20-ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில் தமிழருவி மணியன் பேசவுள்ளார். இதில் கலந்து கொள்ள ரசிகர்கள் தங்களை ஆயத்தப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் காலா படப்பிடிப்பு வரும் செப்டம்பரில் முடிவடைந்தவுடன் மீண்டும் ரசிகர்களை சந்திக்க ரஜினி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அனேகமாக அந்த சந்திப்பு வரும் அக்டோபர் மாதத்தில் நடைபெறும் என்று தெரிகிறது.
கடந்த மே மாதம் நடந்த சந்திப்பின் போது அரசியல் குறித்துப் பூடகமாக பேசியது போல இல்லாமல், இந்த சந்திப்பின்போது ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்து நேரடியாக அறிவிப்பார் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.