வடமாவட்டங்களை குறிவைக்கும் ரஜினிகாந்த்... தூதுவிடும் பாமக பிரமுகர்கள்!
வடமாட்டவங்களை குறிவைத்து தனி கட்சியை தொடங்க இருக்கிறார் ரஜினிகாந்த். இதையடுத்து பாமக பிரமுகர்கள் பலரும் ரஜினிக்கு தூதுவிடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை: தனி கட்சி தொடங்குவதில் உறுதியாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கு பாமக பிரமுகர்கள் பலரும் தூதுவிடுவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆகஸ்ட் மாதத்துக்குள் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பயணத்தைத் தொடங்குவார் என அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் உறுதியாகக் கூறுகின்றனர். ரஜினிக்கு ஆதரவாக பலதரப்பட்ட சமூகங்களில் இருந்தும் முக்கிய பிரமுகர்கள் அவரைத் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர்.
இதில் பா.ம.கவினரும் அடக்கமாம் என்கிறார் ரசிகர் மன்ற நிர்வாகி. சட்டசபை தேர்தலின் போது மாற்றம்-முன்னேற்றம் என்ற பெயரில் வன்னியர் சமூகத்து இளைஞர்களை ஈர்த்தார் பா.ம.க இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ்.
சாதித்த பாமக
தேர்தல் முடிவில் 5% சதவீத வாக்குகளை அள்ளியது பாமக. பா.ம.கவை ராமதாஸ் தொடங்கியபோது பெற்ற வாக்குகளை கடந்த தேர்தலில் பெற்று சாதித்தது அக்கட்சி. தற்போது விஜயகாந்த் பாணியில் வடதமிழகத்தையே ரஜினிகாந்த் குறிவைத்து அரசியல் கட்சியை தொடங்க உள்ளார்.
பாமக பிரமுகர்கள் தூது
இதனால் வடதமிழகத்தில் செல்வாக்குள்ள பாமக பிரமுகர்கள் பலரும் ரஜினிகாந்தின் ராகவேந்திரா மண்டபத்தைத் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய ரஜினி ரசிகர் மன்ற தலைமை நிர்வாகி ஒருவர், வடமாவட்டங்களில் செல்வாக்குடன் இருக்கும் சமூக மக்களுக்கு தன்னுடைய புதிய கட்சியில் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க இருக்கிறார் ரஜினி.
சீனியர்களும் கூட...
கட்சிப் பதவிகளில் வடதமிழக பெரும்பான்மை சமூகத்தினர் இடம் பெற உள்ளனர். இதை கேள்விப்பட்டு, பா.ம.கவில் உள்ள சீனியர்கள் கூட சிலரும் தொடர்பு கொண்டு எங்களுடன் பேசி வருகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை வடதமிழகத்தில் அ.தி.மு.க மற்றும் தி.மு.கவில் வன்னியர் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவதால், பா.ம.கவின் வெற்றி தொடர்ந்து பாதிக்கிறது. திராவிடக் கட்சிகளிலும் ஒரு சில அமைச்சர் பதவிகளை மட்டும் கொடுத்துவிட்டு எங்களை ஒதுக்கி வைத்துவிடுகின்றனர். உங்கள் தலைமையின்கீழ் ஒரு பெரிய மாற்றம் வரும் என எதிர்பார்க்கிறோம். அரசியல் களத்தில் இணைந்து செயல்படுவோம் என மனம் திறந்து பேசி வருகின்றனர்.
ஓய்வு பெற்ற அதிகாரிகள்
இந்தத் தகவல்களை எல்லாம் ரஜினியின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறோம். ஓய்வு பெற்ற அதிகாரிகள் பலரும் கூட ராகவேந்திரா மண்டபத்தைத் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர் என்றார் அவர். இந்த தகவல் தைலாபுரத்தையும் டென்ஷனாக்கியிருக்கிறதாம்.