விரைவில் முழு நேர அரசியலில் ரஜினி... நிச்சயம் முதல்வராவார்.. சொல்வது அண்ணன் சத்யநாராயணா!
ரஜினி விரைவில் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்று அவரது அண்ணன் சத்யநாராயணா பேட்டி அளித்துள்ளார்.
சென்னை: ரஜினி விரைவில் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்று அவரது அண்ணா சத்யநாராயணா திருப்பத்தூரில் பேட்டி அளித்துள்ளார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கடந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி அறிவித்தார். எனினும் இன்னும் அரசியல் கட்சியை அவர் தொடங்கவில்லை.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு இன்னும் நேரம் இருக்கிறது என்று பிடிகொடுக்காமல் ரஜினி பேசினார். இதனால் ரசிகர்கள், மக்கள் குழப்பம் அடைந்தனர்.
ரஜினிகாந்த் எப்போதுதான் கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மனதிலும் உள்ளது. மேலும் அவர் தொடர்ந்து படங்களில் ஒப்பந்தம் ஆகிக் கொண்டே இருப்பதால் கட்சி தொடங்குவது எப்போது என்ற கேள்வி மேலும் அதிகரித்துள்ளது.
இதற்கு ரஜினிகாந்தும் இதுவரை சரியான பதிலை அளித்ததில்லை. இந்நிலையில் வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே ஆண்டியப்பனூர் கிராமத்தில் உள்ள பாப்பாத்தியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி விழா நடைபெற்றது.
இந்த விழாவில் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயணா கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்கள் கூறுகையில், ரஜினி நடித்து கொண்டிருக்கும் புதிய படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இமாச்சலில் நடைபெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது. 2.0 படம் வரும் நவம்பர் மாதம் 29-ஆம் தேதி வெளியாகிறது.
ரஜினி விரைவில் முழு நேர அரசியலில் ஈடுபடுவார். இதை யாராலும் தடுக்க முடியாது. தமிழக மக்கள் ஆதரவுடன் ரஜினி முதல்வராவார். மாநில நிர்வாகிகள் சுதாகர்ஸ ராஜு மகாலிங்கம் ஆகியோர் செயல்பாடுகளில் திருப்தி இல்லை. விரைவில் அவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவர்.
கிருஷ்ணகிரியில் எங்களுடைய தாய்-தந்தைக்கு கோயில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழாவில் ரஜினி கலந்து கொள்வார் என்றார் சத்யநாராயணா.