பாஜக கூட்டணியில் யாருக்கு எந்த தொகுதி, எத்தனை தொகுதி.. ராஜ்நாத் சிங் அறிவிப்பாராம்!
சென்னை: பாஜக கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எத்னை தொகுதிகள், எந்தத் தொகுதிகள் என்ற விவரத்தை பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் அறிவிப்பார் என்று மூத்த பாஜக தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில், மோடியைப் பிரதமராக்குவோம் என்ற நிகழ்ச்சியை பாஜக நடத்தியது. அதில் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இல.கணேசன் பேசுகையில்,
பாஜக கூட்டணியில், தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. தொகுதி பங்கீட்டை பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் சென்னை வந்து வெளியிடுவார்.
கூட்டணி கட்சித் தலைவர்கள் முன்னிலையில் தொகுதிகள் பட்டியல் வெளியிடப்படும். தேமுதிக பிரச்சாரத்தில் பாஜக உட்பட கூட்டணி கட்சித் தொண்டர்கள் பங்கேற்பர் என்று தெரிவித்தார்.
திமுக, அதிமுகவுக்கு மாற்று பாஜகதான்- வெங்கையா
கூட்டத்தில் வெங்கையா பேசுகையில், அதிமுக, திமுகவுக்கு மாற்றாக தமிழகத்தில்பாஜக கூட்டணி அமையும். இந்தியாவில் ஊழலற்ற, சிறந்த ஆட்சியை மோடி அமைப்பார் என்று மக்கள் நம்புகின்றனர். மாநில கட்சிகள் இணைந்து மத்தியில் 3வது அணியை அமைப்பது சாத்தியமற்றது.
தவறான வெளியுறவு கொள்கைகளால் அண்டை நாடுகளுடன் உறவு பாதிக்கப்பட்டுள்ளது. வெளியுறவு கொள்கையால் சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு சரிந்துள்ளது.
தவறான கொள்கையால் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளது. நிலத்தில் காமன்வெல்த் முறைகேடு. நிலத்துக்கு அடியில் நிலக்கரிச் சுரங்கம், வானத்தில் ஹெலிகாப்டர், அதற்கு மேல் 2ஜி அலைவரிசை என ஊழல்களை செய்துள்ளது. கடந்த 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்ககையில் இதுபோன்ற சந்தர்ப்பவாத அரசியலை நான் பார்த்ததில்லை.
தமிழக வரலாற்றில் முதல் முறையாக இன்று ஒரு புதிய அத்தியாயம் உருவாகியிருக்கிறது. தமிழகத்தில் உள்ள கட்சிகள் பாஜகவுடன் ஒன்றாக கைகோர்த்து, 3வது மாற்று அணியாக மக்கள் முன் நிற்கிறது. இது தேமுதிக, பாமக, மதிமுக, கொங்குநாடு மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் சேர்ந்த கூட்டணி. தமிழகம் முழுவதும் இந்த அலை வீசுகிறது என்றார் வெங்கையா நாயுடு.