வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தத்திற்கு உயர் நீதிமன்றம் தீர்வு காண வேண்டும்: ராமதாஸ்
சென்னை: வழக்கறிஞர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் வழக்குகள் தேங்குவதை தடுக்க வழக்கறிஞர்களை நிபந்தனையின்றி அழைத்து பேசி பிரச்சினைக்கு தீர்வு காண உயர்நீதிமன்ற நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வழக்கறிஞர்கள் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்களை நிபந்தனையின்றி திரும்பப்பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த நடத்தை விதி சட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் சில திருத்தங்களை செய்தது. அதன்படி நீதிமன்றங்களில் போராட்டம் போன்ற செயல்களில் ஈடுபட்டாலோ, நீதிபதிகளிடம் மரியாதைக்குறைவாக நடந்து கொண்டாலோ சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் தொழில் செய்ய நீதிபதிகளே தடை விதிக்க முடியும்.
இத்திருத்தம் தங்களின் உரிமைகளை பறிக்கும் செயல் என்று கூறி வழக்கறிஞர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இரு தரப்பிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதற்கு பயனில்லாமல் போனதன் விளைவாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று முதல் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு காலத்தில் வழக்கறிஞர்கள் நீதியையும், நியாயத்தையும் காக்கும் கணவான்களாக இருந்தனர். வ.உ.சிதம்பரனார் தொடங்கி காந்தியடிகள் வரை விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர்கள் வழக்கறிஞர்கள் தான். நீதிக்காகவும், நியாயத்திற்காகவும் போராட வேண்டும் என்று அவர்கள் மனதில் இயல்பாக பதிந்திருந்த எண்ணம் தான் அவர்களை விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடத் தூண்டியது.
ஆனால், வழக்கறிஞர்களில் ஒரு பிரிவினர் அவர்களின் தொழில் தர்மத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதால் வழக்கறிஞர் சமூகத்திற்கு அவப்பெயர் ஏற்படுவதை மறுக்க முடியாது. நீதிமன்றங்கள் மற்றும் தலைமை நீதிபதி இல்ல வளாகத்தில் சில வழக்கறிஞர்கள் ஒழுக்கக் கேடாக நடந்து கொண்டது பொதுமக்களை முகம் சுழிக்க வைத்ததை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்.
இத்தகைய செயல்கள் தொடர்கதையாவதை தடுக்க சில நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது தான் பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதாக எண்ணி வழக்கறிஞர்கள் சட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கொண்டு வந்துள்ள திருத்தங்கள், தங்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் உள்ளதாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். இந்த விஷயத்தில் நீதிமன்றங்களின் மாண்பும், வழக்கறிஞர்களின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்.
வழக்கறிஞர்களின் நீதிமன்ற புறக்கணிப்பு காரணமாக உயர்நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன. இது நீதி வேண்டி நிற்கும் மக்களை பாதிக்கும் என்பதாலும், உயர்நீதிமன்றத்தில் மேலும் வழக்குகள் தேங்குவதற்கு வகை செய்யும் என்பதாலும் வழக்கறிஞர்களை நிபந்தனையின்றி அழைத்து பேசி பிரச்சினைக்கு தீர்வு காண உயர்நீதிமன்ற நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.