பாரபட்சம் இல்லாமல் உளறும் அமைச்சர்... திண்டுக்கல் சீனிவாசனை வாரும் ராமதாஸ்!
பிரதமர், நடிகை, பாடகி என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அனைவருக்கும் ஒரே உளறலைத் தான் வைத்துள்ளார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கிண்டல் செய்துள்ளார்.
சென்னை : பிரதமரின் பெயர் தெரியாத அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் என்று அவரை பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கேலி செய்துள்ளார்.
அதிமுகவில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அமைச்சர்கள் யாரையும் ஏன் வாய் திறக்க விடாமல் வைத்திருந்தார் என்பது இப்போது தான் தெரிகிறது.
அவர்கள் வாய் திறந்து பேசினால் கட்சியின் வண்டவாளம் தண்டவாளம் ஏறும் என்பதை புரிந்து தான் அனைவரையும் கவுரவமாக தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளார் ஜெயலலிதா.
தப்புத் தப்பாக பேசும் அமைச்சர்கள்
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அமைச்சர்கள் சுதந்திரப் பறவையானது போல செய்தியாளர்களிடமும், பொதுமேடையிலும் சகட்டு மேனிக்க உளறித் தள்ளி வருகின்றனர். ஜக்கிவாசுதேவின் நதிகள் இணைப்பு கூட்டத்தில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கர்நாடக இசைப்பாடகி சுதா ரகுநாதனை பரதநாட்டியக் கலைஞர் என்று குறிப்பிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.
தப்புத் தாளங்கள் சீனிவாசன்
இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். திண்டுக்கல்லி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் டெங்குவை ஒழிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியை துணை முதல்வர் சந்தித்தார் என்று சொல்வதற்கு பதில் பிரதமர் மன்மோகன்சிங்கை துணை முதல்வர் பன்னீர்செல்வம் சந்தித்து வந்தார் என்று மீண்டும் உளறிக் கொட்டியுள்ளார்.
அடுத்தடுத்து உளறல்
உளறலில் யார் முதன்மை என்று போட்டிபோடும் அளவிற்கு அதிமுக அமைச்சர்களின் பேச்சுக் கூத்துகள் பொதுமேடையில் அரங்கேறி வருகின்றன. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் கருத்து குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து 2 கருத்துகளை பதிவிட்டுள்ளார்.
|
ராமதாஸ் சாடல்
அதில் பிரதமரின் பெயர் தெரியாத அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்: அவரு பாரபட்சமே பார்க்க மாட்டார். பிரதமர், நடிகை, பாடகி அனைவருக்கும் ஒரே உளறல் தான்! என்று டுவீட்டியுள்ளார்.
|
முதல் அடிமை இவர்தான்
மற்றொரு டுவீட்டில் உலகில் முதலாளி பெயரை தவறாகக் கூறிய முதல் அடிமை இவர் தான்! என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை செமையாக கலாய்த்துள்ளார். சமூக வலைதளங்களில் ஏற்கனவே பலர் அமைச்சர் சீனிவாசனுக்கு எதிராக கருத்துகளை தெறிக்க விட்டு வரும் நிலையில், ராமதாஸின் இந்த கருத்துகள் அவர்களுக்கு கூடுதல் குஷியைத் தந்துள்ளது.