முதல்வர் வேட்பாளராக அன்புமணி... ஓகே சொன்னால் பாஜக கூட்டணி + துணை முதல்வர் பதவி: ராமதாஸ் ஆஃபர்
சென்னை: அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்வதாக இருந்தால் பாஜகவுடன் கூட்டணி அமைப்போம். கூடவே துணை முதல்வர் பதவியும் அளிப்போம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் திருவிழா இப்போதே களை கட்டத் தொடங்கி விட்டது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, முதல்வர் வேட்பாளர் உள்ளிட்டவற்றை அறிவித்து வருகின்றன.
அந்தவகையில் பாமக ஏற்கனவே அன்புமணி ராமதாஸை அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி, மற்றும் நெல்லை மாவட்ட பொதுக்குழு கூட்டத்திற்காக தூத்துக்குடி வந்திருந்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். முன்னதாக தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர் போன்ற பகுதிகளை அவர் பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்கள் மத்தியில் ராமதாஸ் கூறியதாவது:-
மழையால் வெள்ளம்...
வடகிழக்குப் பருவமழையால் தமிழகத்தில் திருவள்ளூர் சென்னை, காஞ்சிபுரம் கடலூர் மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டுள்ளன. அதற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி நகரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது மழை வெள்ளம் அப்புறப்படுத்தப்படவில்லை மீட்பு பணிகளை சரிவரச் செய்யவில்லை.
நோய் பரவும் அபாயம்...
தூத்துக்குடியில் தேங்கிக் கிடக்கும் மழை நீரால் டெங்கு, மலேரியா காலரா போன்ற நோய்கள் ஏங்படும் அபாயம் உள்ளது. ஆதலால் மாநகராட்சி நிர்வாகம் மழை நீரை அகற்றும் பணியில் மெத்தனம் காட்டக் கூடாது. மழை வெள்ளம் வந்தால் குடிசைகள் தான் மூழ்கும். ஆனால் தூத்துக்குடியில் கலெக்டர் அலுவலகமே வெள்ளத்தால் மூழ்கி விட்டது.
ஆட்சியில் பங்கு...
சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வரும்போது அ.தி.மு.க. கதை முடிந்து விடும். அ.தி.மு.க. தி.மு.க.வைத் தவிர யார் வேண்டுமானாலும் எங்களோடு வரலாம். அப்படி வரும். கட்சிக்கு எங்கள் கூட்டணி ஆட்சியில் அதிகாரப்பகிர்வு அளிக்கப்படும்.
பாஜக கூட்டணி...
அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டால் பா.ஜ.க.வுடன் கூட்டணி. அதோடு துணை முதல்வர் பதவியும் கொடுப்போம்" எனத் தெரிவித்தார்.
லோக்சபா தேர்தல் கூட்டணி...
ஏற்கனவே கடந்த லோக்சபா தேர்தலின் போது பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்திருந்தது. பின்னர் சிலப்பல காரணங்களால் பாமக அக்கூட்டணியில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.