பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்க: ராமதாஸ்
சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், டீசல் விலை 1.90 ரூபாயும் உயர்த்தப்பட்டிருக்கின்றன. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏழை- நடுத்தர மக்களை பாதிக்கும் இவ்விலை உயர்வுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தில் மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் கடைபிடிக்கும் அணுகுமுறை மக்கள் விரோத செயலாகும். கச்சா விலை சரியும் போது அதன் பயனை மக்கள் அனுபவிக்க விடாமல் தடுக்கும் வகையில், கலால் வரியை உயர்த்தும் மத்திய அரசு, கச்சா எண்ணெய் விலை உயரும் போது மட்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். இது முழுக்க முழுக்க மக்கள் நலனில் அக்கறையற்ற, வணிக நோக்கம் கொண்ட நடவடிக்கையாகும்.

மத்தியில் நரேந்திர மோடி அரசு பதவியேற்ற பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி பெட்ரோல் மீதான கலால் வரி 9 தவணைகளில் லிட்டருக்கு 11.77 ரூபாயும், டீசல் மீதான வரி 13.47 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ஓராண்டுக்கு கிடைக்கும் வருமானம் ரூ.1,46,838 கோடி ஆகும். இவ்வளவு வருமானத்தை கூடுதலாக ஈட்டும் மத்திய அரசு இப்போது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் இருந்திருந்தால் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்காது.
டீசல், மற்றும் பெட்ரோல் மீது மிக அதிகமாக கலால் வரியை விதித்திருக்கும் மத்திய அரசு, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் போது கலால் வரியை சற்று குறைத்துக் கொள்வது தான் மக்கள் நலன் காக்கும் ஓர் அரசின் அணுகுமுறையாக இருக்க முடியும். ஆனால், அனைத்து செலவுகளுக்கும் பெட்ரோல், டீசல் மீதான வரியிலிருந்து தான் வருவாய் திரட்ட வேண்டும் என்ற மத்திய அரசின் ஆசையும், அணுகுமுறையும் தான் இந்த நிலைக்கு காரணமாகும்.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிகரித்ததால் கிடைக்கும் வருமானத்தை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அரசு செலவிடுகிறது என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி கூறியிருக்கிறார். மத்திய அரசால் உட்கட்டமைப்பு என்று கூறப்படும் அனைத்து வசதிகளும் பெரும் நிறுவனங்களுக்கு மட்டுமே பயனளிக்கக்கூடியவை ஆகும். பெரு நிறுவனங்களுக்கு வசதி செய்து தருவதற்காக ஏழைகள் பயன்படுத்தும் எரிபொருளுக்கு விலை உயர்த்துவது எந்த வகையில் நியாயம்?
கடந்த மார்ச் ஒன்றாம் தேதி தான் டீசல் விலை ரூ.1.51 உயர்த்தப்பட்டது. அதற்குள் டீசல் விலையை மீண்டும் ரூ.1.90 உயர்த்துவது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். டீசல் விலை உயர்வால் சரக்குந்துகளின் வாடகை அதிகரித்து அதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும்.
எனவே, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications