கடல்வள பாதுகாப்பிற்குப் பாடுபட்ட பாம்பன் மீனவப் பெண்ணுக்கு அமெரிக்கா ரூ. 6.60 லட்சம் பரிசு
ராமேஸ்வரம்: கடல் வள பாதுகாப்பிற்கும், மீனவ பெண்களின் வாழ்வு உயரவும் பாடுபட்டதற்காக பாம்பன் மீனவப் பெண்ணுக்கு அமெரிக்க தொண்டு நிறுவனம் ரூ. 6.60 லட்சம் ரூபாய் பரிசுடன் கூடிய விருது வழங்க உள்ளது.
ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன், சின்னபாலம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி (47). பாம்பன் ஊராட்சி, 14வது வார்டு கவுன்சிலரான இவர் ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி முதல், ராமேஸ்வரம் வரை, 25 கிராமத்தைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான கடலோரத்தில் வசிக்கும் மீனவ பெண்களை ஒருங்கிணைத்து கூட்டமைப்பாக பாசி சேகரிக்கும் தொழிலில் ஈடுபடுத்தி வருகிறார். இதன் மூலம் மீனவப் பெண்களின் பொருளாதாரம் மேம்பட அவர் பாடுபட்டு வருகிறார்.
பாசி சேகரிப்பதை வெறும் தொழிலாக மட்டும் பார்க்காமல், கடல் வளங்கள் பாதிக்கப் படாமலும் இவர்கள் பாதுகாத்து வருகின்றனர். இதற்காக மாதத்தில் 12 நாட்கள் மட்டுமே இப்பெண்கள் பாசி சேகரிப்பு தொழிலில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில் லட்சுமியின் இந்த சேவை குறித்து, 'பேடு' எனும் தொண்டு நிறுவனம், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பெர்க்லின் நகரில் உள்ள சீக்லாஜி எனும் கடல் வள பாதுகாப்பு தொண்டு நிறுவன விருதுக்கு பரிந்துரை செய்தது.
இந்த நிறுவனமானது ஆண்டுதோரும் உலகளவில் கடல்வளத்தைப் பாதுகாக்க போராடுபவர்களைத் தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. அதன்படி, இந்தாண்டு உலகளவில் தேர்வானவர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்த இந்த நிறுவனம், இறுதியாக லட்சுமியை விருதுக்காகத் தேர்வு செய்தது.
இந்த விருதானது வரும் அக்டோபர் மாதம் 8ம் தேதி கலிபோர்னியாவில் நடக்கும் விழாவில் லட்சுமிக்கு வழங்கப் படும். விருதுடன் இந்திய மதிப்பில் ரூ. 6.60 லட்சம் பரிசுத் தொகையும் அவருக்கு வழங்கப் பட உள்ளது. லட்சுமி அமெரிக்கா செல்வதற்கான அனைத்து போக்குவரத்து செலவுகளையும் விருது வழங்கும் தொண்டு நிறுவனமே ஏற்றுள்ளது.
இந்த விருது குறித்து லட்சுமி கூறுகையில், "கடலில் பாசி எடுக்கும் தொழில் முறை குறித்தும், அதே சமயம் கடல் வளம், மீன் வளம் அழியாமல் பாதுகாக்கவும், அமாவாசை, பவுர்ணர்மிக்கு முன் தலா ஆறு நாட்கள் மட்டுமே மீன்பிடிக்க செல்ல வேண்டும் என பெண்களிடம் வலியுறுத்தி வருகிறேன். அதை இன்று வரை பின்பற்றியும் வருகிறோம்.
காலை 6 மணிக்கு என்ஜின் பொருத்தப்பட்ட ஒரு நாட்டுப் படகு அல்லது வத்தை என்று சொல்லக் கூடிய துடுப்பு போட்டு செல்லும் படகில் 15 மீனவ பெண்கள், பாம்பன் அருகே உள்ள குருசடை தீவு, மனோலி தீவு, வாலை தீவு வரை பாசிசேகரிக்க செல்கின்றோம். கரையோரத்தின் உள்ள பாறைகளில் வளர்ந்திருக்கும் பக்கடா பாசி, கட்டக் கோரை, கஞ்சிப்பாசி, மரிக்கொழுந்து உள்ளிட்ட பல வகை பாசிகளை சேகரித்து மதியம் 3 மணிக்கு கரை திரும்புவோம்.
பாசிகளை நன்றாக உலர்த்தி, வியாபாரிகளிடம் கொடுத்து மாதம் தலா ரூ.7 ஆயிரம் வீதம் ஒவ்வொருவருக்கும் வருமானம் கிடைக்கிறது. கடலில் இயற்கையாக விளையும் கடல் பாசிகளை பாதுகாத்து, கடல் வளங்கள் அழியாமல் பாதுகாக்கும் பொருட்டு மாதத்தில் 12 நாட்கள் மட்டுமே பாசி சேகரிக்கச் செல்கிறோம்.
ஒருவித கட்டுப்பாட்டுடன் இந்த தொழிலை நாங்கள் சேர்ந்து செய்து வருகின்றோம். எனக்கு கிடைத்த விருது, மீனவ பெண்களுக்கு கிடைத்த வெற்றி. பரிசு தொகையை மீனவ குழந்தைகளின் படிப்பு, பெண்கள் நலனுக்காக செலவிடுவேன்' எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேடு தொண்டு நிறுவன இயக்குனர் ராஜேந்திர பிரசாத் கூறுகையில், "அமெரிக்காவில் உள்ள சீக்காலஜி போர்டு என்ற தொண்டு நிறுவனம், கடல் வளங்களை பாதுகாத்தல் என்ற பெயரில் ஆண்டு தோறும் ஒரு சிறப்பு விருது வழங்குகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு பாம்பன் சின்னப் பாலத்தை சேர்ந்த லட்சுமி என்ற மீனவ பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்த மீனவப் பெண் ஒருவருக்கு கிடைப்பது குறிப்பிடத்தக்கது. இது நமது நாட்டிற்கு கிடைத்த பெருமையாகும்" என்றார்.